வேர்க்குரு நீங்க டிப்ஸ்

verkuru neenga
- Advertisement -

வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் அதிக அளவில் வேர்வை ஏற்படும். அதே சமயம் வேர்க்குருவும் ஏற்படும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பிரச்சனை வரத்தான் செய்யும். வேர்க்குருவால் அரிப்பு ஏற்படும். இதை நாம் சொரிய சொரிய வேர்க்குரு அதிகரித்துக் கொண்டே செல்லும். இப்படிப்பட்ட வேர்க்குருவை எப்படி எளிய முறையில் சரி செய்வது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

உடல் வெப்பமாவதை தவிர்ப்பதற்காக மட்டுமே தான் வியர்வை ஏற்படுகிறது. பொதுவாக நம்முடைய உடல் சூடு அதிகரிக்கும் பொழுது வேர்வை துளிகள் உற்பத்தியாகி உடலை குளிர்ச்சி அடைய செய்யும். ஆனால் இந்த வெயில் காலத்தில் வெளிப்புறத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பமான சூழ்நிலை உருவாகும். அப்பொழுது இன்னும் அதிகமாக வியர்வை ஏற்படும்.

- Advertisement -

இப்படி ஏற்படக்கூடிய வியர்வை சரியாக நம்முடைய சருமத்திலிருந்து வெளியில் வராமல் அந்த சரும துளைகளில் ஏதேனும் அடைப்பு இருந்தால்தான் இது வியர்வை கொப்பளம் ஆக வரும். அதாவது வேர்க்குருவாக வரும். வியர்வையில் தண்ணீர் மட்டுமல்லாமல் உப்பு தன்மையும் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த உப்புத் தன்மையால் நம்முடைய சருமத்தில் அலர்ஜி ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. அதனால் தான் நாம் வேர்க்குருவை சொறியும் பொழுது வேர்க்குரு கொப்பளங்கள் உடைந்து அதிலிருந்து வரக்கூடிய உப்புத்தன்மையானது மற்ற இடங்களிலும் பரவி அதிகமான அளவு வேர்க்குரு ஏற்படுகிறது.

சரி இந்த வேர்க்குரு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வேர்க்குரு வராமல் இருப்பதற்கு முதலில் நம்முடைய உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் மோர், இளநீர் தண்ணீர் சத்து அதிகம் இருக்கக்கூடிய பழ வகைகள் என்று நம்முடைய உடலை எந்த அளவிற்கு குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வேர்க்குரு வந்துவிட்டது அதை எப்படி சரி செய்வது? வேர்க்குரு வந்த இடங்களில் நம்முடைய நகங்களை வைத்து நாம் சொரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வேர்க்குரு வந்த இடங்களில் சோற்றுக்கற்றாழையை நன்றாக சுத்தம் செய்து தடவி வர அரிப்பானது குறைந்து வேர்க்குருவும் கட்டுக்குள் வரும். சோற்றுக்கற்றாழை இல்லை என்பவர்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் தயிரையும் தேய்க்கலாம்.

தயிர் ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு வேர்க்குருவை மேலும் பரவாமல் பார்த்துக் கொள்ளும். இதோடு மட்டுமல்லாமல் சுத்தமான சந்தனத்தையும் நாம் பயன்படுத்தலாம். இதேபோல் வேப்ப இலையை அரைத்தும் தடவலாம். இவை அனைத்தும் இயற்கையாக கிடைக்கக் கூடியவை.

- Advertisement -

செயற்கையாக வேர்க்குரு பவுடரை உபயோகப்படுத்தலாமா? என்று கேட்டால் கண்டிப்பான முறையில் உபயோகப்படுத்தலாம். ஆனால் அதற்கும் ஒரு சில அளவுகள் இருக்கிறது. அதிகமாக வேர்க்குரு இருக்கிறது என்பதற்காக நாம் அதிக அளவில் பவுடர்களை உபயோகப்படுத்தினோம் என்றால் அந்த பவுடரே சருமத்துளைகளுக்குள் அடைப்பை ஏற்படுத்தி அதிக அளவில் வேர்க்குருவை ஏற்படுத்தும். அதனால் அளவான முறையில் வேர்க்குரு பவுடரை பயன்படுத்தியும் நாம் இந்த வேர்க்குரு பிரச்சனையிலிருந்து வெளியில் வரலாம்.

இதையும் படிக்கலாமே: என்றும் இளமையாக இருக்க உதவும் கற்றாழை

வெயில் காலத்திற்கு தேவையான நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதோடு தண்ணீரையும் அதிக அளவில் உட்கொண்டாலே நம்முடைய உடலில் வேர்க்குரு ஏற்படாது.

- Advertisement -