உங்கள் வீட்டில் பிரட் மற்றும் உருளைக்கிழங்கு இவை இரண்டும் இருந்தால் போதும். சுவையான பிரட் மசாலா ரோல் செய்திடலாம்

bread1
- Advertisement -

குழந்தைகள் மிகவும் சுட்டித்தனமானவர்கள். அவர்கள் புதுமையாக எதைக் கண்டாலும் உடனே வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நாம் வெளியில் அழைத்து சென்றால் அங்கு அவர்கள் பார்க்கும் புது விதமான பொருட்கள் அனைத்தும் தங்களுக்கு வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். இப்படி குழந்தைகளை மனதை புரிந்து கொண்டால் போதும். அவர்களை சாப்பிட வைப்பதும் எளிமையாகிவிடும். குழந்தைகள் எப்போதும் ஒரே மாதிரியான உணவை செய்து கொடுத்தால் அவற்றை வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். அவர்களுக்கு பிடித்த உணவுகளை விதவிதமா, வெவ்வேறான வடிவங்களில் செய்து கொடுத்தால் நீங்கள் கொடுக்கும் முன்னரே எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் தான் ஹோட்டல்களுக்கு சென்றால் அங்கு கொடுக்கப்படும் வேறு விதமான உணவுகளை குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். அப்படி நீங்களும் வீட்டில் செய்யும் இந்த பிரட் மசாலா ரோலை குழந்தைகள் மிகவும் விருமிபி சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – 3, கரம் மசாலா – அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், சாட் மசாலா – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பிரட் – 10 துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, மூடி போட்டு 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். பிறகு உருளைக் கிழங்கை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக உடைத்துவிட வேண்டும். பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியையும் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்று சேர பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் பிரட் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அதன் ஓரங்களை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பிரட் துண்டை கையில் எடுத்துக் கொண்டு, அதனை தண்ணீரில் நனைத்து கொள்ள வேண்டும். பின் பிரட் துண்டின் நடுவே பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை சிறு உருண்டையாக எடுத்து வைத்து பிரட்டை உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரட் மசாலா ரோல் தயாராகிவிடும்.

- Advertisement -