அமாவாசை வழிபாடு முன்னோர்களுக்கு உரியது. அதிலும் இந்த தை அமாவாசை என்பது சிறப்பான அமாவாசை என்று நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த தை அமாவாசையில் கட்டாயம் காலை நேரத்தில் எல்லோரும் முன்னோர்களது வழிபாட்டை செய்திருக்க வேண்டும். சரி, காலையில் முன்னோர்களது வழிபாட்டை முடித்து விட்டோம். மாலையில் ஒரு சிறப்பான வழிபாடை செய்ய வேண்டியதும் நம்முடைய கடமை.
இந்த வழிபாடு நம்முடைய குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டத்தை தீர்த்து வைக்கும். சில குடும்பங்களில் எல்லாம் பல நாட்களாக சிரிக்கவே மறந்து போயிருப்பாங்க. கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் அந்த குடும்பத்தை போட்டு வாட்டி வறுத்து எடுத்திருக்கும். அப்பேர்ப்பட்ட துன்பத்தை எல்லாம் கூட ஒரு நொடிப் பொழுதில் சரி செய்ய முடியும். நாளைய தினம் தை அமாவாசை, மாலை நேரத்தில் அபிராமி தாயை நினைத்து இந்த ஒரு பாடலை பாடி வழிபாடு செய்தால்.
கஷ்டங்கள் தீர தை அமாவாசை வழிபாடு
தை அமாவாசை திதிக்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கிறது. அதில் ஒரு சிறப்பு வாய்ந்த புராண கதையை சுருக்கமாக இரண்டு வரியில் பார்ப்போம். திருக்கடையூரில், அபிராமி பட்டருக்கு, அன்னை அபிராமி, பௌர்ணமி நிலவாக தரிசனம் கொடுத்த நாள், இந்த தை அமாவாசை. அமாவாசை அன்று எப்படிங்க நிலா வரும். அமாவாசை இருட்டா இருக்கும். நிலவு வந்தால் அது பௌர்ணமி திதி ஆயிற்றே, என்று நீங்கள் யோசிப்பது நன்றாக புரிகிறது.
அபிராமி பட்டர், அபிராமி அன்னையை நினைத்து மனமுருகி வேண்டி பிரார்த்தனையில் இருக்கும் போது, அந்த சமயத்தில் நீராடி முடித்து விட்டு வந்த சரபோஜி மன்னர், அபிராமி பட்டரை பார்த்து கேட்கிறார். ‘இன்றைக்கு என்ன திதி என்று’ அபிராமி பட்டரோ அன்னை அபிராமியின் வழிபாட்டில் மூழ்கி இருக்கிறார். தவறாக இன்று பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். ஆனால் அன்று தை அமாவாசை.
சரபோஜி மன்னன் ‘ஓ இன்று பௌர்ணமி திதியா. அப்போது முழு நிலவு வானத்தில் தெரிகிறதா? என்று பார்ப்போம்.’ என்று வானத்தை நோக்கி பார்க்கும் சமயத்தில் அன்னை அபிராமி முழு நிலவாக வானத்தில் காட்சி தருகின்றார். அபிராமி பட்டர் செய்த தவறுக்கு, சரபோஜி மன்னர் எந்த ஒரு தண்டனையும் கொடுக்கக் கூடாது அல்லவா.
ஆகவே அபிராமி அன்னை, அபிராமி பட்டரை காப்பாற்ற, வானத்தில் நிலவாக காட்சி தந்த நாள் தான் இந்த தை அமாவாசை தினம். இந்த நாளில் நாமும் அபிராமி பட்டர் பாடிய, அபிராமி அந்தாதி பாடல் வரிகளை படிக்கும் போது அந்த அபிராமி அன்னை நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தை வழங்குவாள். அபிராமி அந்தாதியில் உங்களுக்கு எந்த பாடல் தெரிந்தாலும் படிக்கலாம். 100 பாடல்கள் இருக்கிறது.
அதெல்லாம் முடியாது எங்களுக்கு அபிராமி அந்தாதியை பற்றி எதுவும் தெரியாது என்பவர்கள் பின் சொல்லக்கூடிய இந்த ஒரு பாடலை மட்டும் நாளை மாலை மனம் உருகி பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு படியுங்கள். தீராத துன்பங்கள், தீராத கஷ்டங்கள் எல்லாம் உங்கள் குடும்பத்தை விட்டு ஓடோடி விடும். உங்களுடைய குடும்பம் பௌர்ணமி நிலவு போல பிரகாசமாக ஜொலிக்கும். நாளை மாலை படிக்க வேண்டிய அபிராமி அந்தாதி பாடல் வரிகள் இதோ உங்களுக்காக.
அபிராமி அந்தாதி
விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு; அவ்வழி கிடைக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?
இதையும் படிக்கலாமே: நாளை தை அமாவாசையில் அதிர்ஷ்டம் பெற போகும் 6 ராசிகள்.
அபிராமி பட்டர் இந்த பாடலை பாடிய போது தான், அபிராமி அன்னை பௌர்ணமி நிலவாக வானத்தில் காட்சி தந்தாள். உங்களுடைய இருட்டான வாழ்க்கையில் சின்ன வெளிச்சம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு சமர்ப்பணம்.