விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு என்று எப்போதுமே ஒரு தனி சிறப்பு உண்டு. எவ்வளவு பெரிய கஷ்டத்தில், எவ்வளவு பெரிய சிக்கலில் நாம் சிக்கிக் கொண்டு இருந்தாலும் சரி, அந்த தருணத்தில் விநாயகரை மனதார நினைத்து பிள்ளையாரப்பா என்று மனதார கூப்பிட்டாலே போதும். அந்த தடைகளும் சிக்கல்களும் உடனடியாக தகர்க்கப்படும். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் விநாயகரை, விநாயகர் சதுர்த்தி அன்று எந்த மந்திரத்தை சொல்லி எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா.
விநாயகர் சதுர்த்தி அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு வீட்டில் பூஜை அறையில் தீபம் ஒன்றை ஏற்றி வைத்து விட வேண்டும். அதன்பின்பு விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு அருகம்புல் வாங்கிக்கொடுத்து ஒரு அர்ச்சனை செய்துவிட்டு விநாயகருக்கு மூன்று தோப்புக்கரணம் போட வேண்டும். 3 பிள்ளையார் கொட்டுகளையும் வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக எப்போதும் போல பிரகாரத்தை வலம் வர வேண்டும். பிரகாரத்தை வலம் வரும்போது நிச்சயமாக கோவிலில் நவகிரகங்களின் சன்னிதானம் இருக்கும். நவக்கிரகங்களை 9 முறை வலம் வரும்போது இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வலம்வர வேண்டும். இத்தனை முறைதான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற கணக்கு கிடையாது.
ஒன்பது முறை நவகிரகங்களை வலம் வரும் போது, மொத்தமாக இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். நவக்கிரகங்களை வலம் வந்த பின்பு, விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும். விநாயகரை மூன்று முறை வலம் வரும் போதும் இதே மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே வலம்வர வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் கோவிலுக்கு சென்று நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ.
ஓம் ஓங்காரமே போற்றி
ஓம் அஷ்ட கணபதியே போற்றி
ஓம் மூலவரே கணேசா போற்றி
ஓம் மஞ்சளில் ஆன மங்கலமே போற்றி
ஓம் சிவசக்தி மைந்தனே போற்றி
ஓம் கந்தனின் மூத்தோனே போற்றி
ஓம் முக்கடவளுக்கும் கடவுளே போற்றி
ஓம் சங்கடஹர சதுர்த்தியானே போற்றி
ஓம் நவக்ரஹ தோஷத்தினை கரைபவனே போற்றி
போற்றி போற்றி என போற்றிடுவேன் நித்தம் நித்தம் என் மூச்சு உள்ளவரை
ஓம் மூஷிக வாகனா போற்றி.
தமிழில் இருக்கக்கூடிய மந்திரம் தான் இது. முடிந்தால் சுலபமாக நீங்கள் இதை மனப்பாடம் செய்து கொள்ளலாம். முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதி வைத்து, அல்லது கைப்பேசியில் இருக்கும் இந்த மந்திரத்தை பார்த்தும் கூட ஒருமுறையேனும் விநாயகர் கோவிலில் உச்சரியுங்கள்.
உங்களால் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை என்றால் வீட்டிலேயே விநாயகரின் திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் போதும். மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு, விநாயகரின் முன்பு அமைதியாக அமர்ந்து, உங்களுடைய கஷ்டங்களை விநாயகரிடம் சொல்லுங்கள். உங்களுடைய கஷ்டங்களுக்கான விமோசனம் கூடிய விரைவில் உங்களுக்கு கிடைத்துவிடும்.
இந்த மந்திரத்தை விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் தான் உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாதம்தோறும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தமை ஆனால் வாழ்வில் என்றென்றும் சங்கடங்கள் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.