அசைவம் சாப்பிடாத சமயத்தில் நம்மால் இந்த சுறா புட்டு சமைக்க முடியாது. ஆனால் புடலங்காயை வைத்து புட்டு செய்தாலும், சுறா புட்டு செய்தது போல வாசமும் ருசியும் கிடைக்கும். அந்த அளவுக்கு சூப்பரான ரெசிபி தான் இது. இதை பார்ப்பதற்கு பொரியல் போல உங்களுக்கு தெரிந்தாலும், இதில் நாம் சேர்க்கக்கூடிய சில விஷயங்கள் சுறா புட்டின் வாசத்தை நமக்கு எடுத்து தரும். மிக மிக சுலபமான முறையில் செய்யக்கூடிய இந்த ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க. ரசம் சாதம், சாம்பார் சாதம், மோர் குழம்பு சாதத்தோடு வைத்து சாப்பிடும் போது அட்டகாசமான காம்பினேஷன் இது. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்
முதலில் 250 கிராம் அளவு புடலங்காயை எடுத்து தோல் சீவி ஓரளவுக்கு பொடியாக நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஆவியில் இரண்டு நிமிடம் வேக வைத்தும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அப்படியேவும் புட்டு செய்ய பயன்படுத்தலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு முதலில் நன்றாக வதக்கி விடுங்கள்.
அதன் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரை வதங்கி வந்தவுடன் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து இரண்டு வதக்கு வதக்கி உடனடியாக வெட்டி வைத்திருக்கும் புடலங்காயை இதில் சேர்த்து தேவையான அளவு உப்புத்தூள் தூவி நன்றாக பிரட்டி விடுங்கள்.
ஆவியில் வேகவைத்து எடுத்த புடலங்காயாக இருந்தால் இரண்டு மூன்று நிமிடம் பிரட்டி விட்டு அப்படியே எடுத்து பரிமாறலாம். வேக வைக்காத புடலங்காயாக இருந்தால் புடலங்காய்க்கு மேலே லேசாக தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடங்கள் ஒரு தட்டு போட்டு மூடினால் புடலங்காய் சூப்பராக வெந்து கிடைக்கும். இந்த புடலங்காய் கடித்து சாப்பிடும் போது கொஞ்சம் நறுக்கு முறுக்கு என இருக்க வேண்டும். ரொம்பவும் வெந்து கொல கொலவென மாறிவிட்டால் இந்த புட்டு நன்றாக இருக்காது.
இதையும் படிக்கலாமே: அச்சசோ இத கவனிக்காம விட்டுட்டோமே, இனி இப்படி சொல்ல வாய்ப்பே இல்ல. இந்த கிச்சன் டிப்ஸ்ஸை நீங்க பாலோவ் பண்ணும் போது. வாங்க அது என்னன்னு பாக்கலாம்.
சுட சுட இந்த புடலங்காய் புட்டை தாளிக்கும் போது இதிலிருந்து ஒரு நல்ல மனம் வீசும். இந்த புடலங்காய் புட்டுக்கு கட்டாயமாக சோம்பு தான் தாளிக்க வேண்டும். சோம்பிலிருந்து வரக்கூடிய அந்த மனம் தான் இதற்கு புட்டு சுவையை கொடுக்கும். பொரியலுக்கு கடுகு உளுந்தம் பருப்பு சேர்ப்போம். இஞ்சி பூண்டு சேர்க்க மாட்டோம் அல்லவா. மேலே சொன்ன முறைப்படி புடலங்காய் புட்டு செய்தால் வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவாங்க. ட்ரை பண்ணி பாருங்க.