பொதுவாக அதிரசத்தை பண்டிகை காலங்களில் மட்டுமே அதிகம் செய்வார்கள். மற்ற நாட்களில் எல்லாம் இதை செய்வது கிடையாது காரணம் இதற்கான வேலைகள் அதிகம். மாவு சரியான பதத்தில் அரைத்து பாகு எடுத்து என ஒவ்வொரு வேலையும் சரியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் அதிரசம் சுட வராது. இதனாலே பெரும்பாலும் அதிரசம் செய்வது கிடையாது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அதிரசத்தை மிக எளிமையான முறையில் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
செய்முறை
இந்த அதிரசம் செய்வதற்கு முதலில் நல்ல தரமான வெல்லமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நேரடியாக அப்படியே காய்ச்ச வேண்டும். வெல்லத்தில் மண் இருந்தால் நாம் நேரடியாக செய்யும் போது அதிரசத்திலும் மண் இருக்கும். சாப்பிடும் போது நறநறவென்று மாறி ருசி கெட்டு விடும்.
இப்போது அடுப்பில் அடி கனமான பாத்திரம் ஒன்றை வைத்து அதில் இரண்டு கப் வெள்ளத்தை பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு கப் தண்ணீரையும் ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள். இதில் கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு டீஸ்பூன் நெய் இவை அனைத்தையும் சேர்த்து வெல்லம் நன்றாக கரைந்து கொதி வர வேண்டும்.
அடுத்ததாக கொதித்துக் கொண்டிருக்கும் வெல்லத்தில் ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் பச்சரிசி மாவு இரண்டையும் சேர்த்து பின் அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து நன்றாக கை விடாமல் கலந்து விட வேண்டும். வெல்லத் தண்ணீரில் இந்த மாவு அனைத்தும் கரைந்து கெட்டியாகி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு மூடி போட்டு மாவை ஆற விட வேண்டும்.
மாவு நன்றாக ஆறிய பிறகு மூடியை எடுத்த பின் கைகளில் எண்ணெய் அல்லது நெய் தடவிய பிறகு மாவை அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவு அதிரசம் தட்டும் அளவிற்கு பக்குவமாக வந்தவுடன் மாவை மூடி போட்டு எடுத்து வைத்து விடுங்கள்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்து விடுங்கள். இப்போது பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவர் ஏதாவது ஒன்றில் வைத்து அரை இன்ச் அளவிற்கு இதை அதிரசம் போல தட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு சிவந்து வரும் வரை இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுத்து விடுங்கள். சுவையான அதிரசம் பத்து நிமிடத்தில் தயாராகி விட்டது.
இந்த அதிரசம் செய்வது மிகவும் சுலபம் தான். வெல்லம் நல்ல தரமான வெல்லமாக பார்த்து பயன்படுத்த வேண்டும் அதே நேரம் வெல்ல கரைச்சலில் மாவை சேர்த்தவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும். அதன் பிறகு என்னை நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு அதிரசத்தை போட்டு எடுக்க வேண்டும் அவ்வளவு தான் அதிரசம் சுவையாக தயாராக இருக்கும். இந்த முறையில் நீங்களும் அதிரசம் செய்து பாருங்கள் இனி அடிக்கடி செய்வீர்கள்.