Bread halwa : நாவூரும் பிரட் அல்வா வீட்டிலேயே 10 நிமிஷத்தில் செய்து சாப்பிடலாமே

bread-halwa1_tamil
- Advertisement -

பிரியாணி கூட கொடுக்கும் இந்த பிரட் அல்வா, கல்யாண வீடுகளில் கூட வைப்பது உண்டு. எல்லோரும் விரும்பக் கூடிய இந்த சுவையான பிரட் அல்வா பார்க்கும் பொழுதே நாவூரும் அளவிற்கு அருமையாக இருக்கும். இதை இனி பிரியாணி கூட மட்டும் இல்லைங்க, நம்ம வீட்டிலேயே எளிதாக 10 நிமிடத்தில் நம்ம கையாலே செஞ்சி சாப்பிடலாம். ரொம்பவே அருமையான சுவையில் இருக்கக்கூடிய இந்த டேஸ்டியான பிரட் அல்வா ரெசிபி எப்படி வீட்டில் தயாரிப்பது? அப்படின்னு தெரிஞ்சுக்கவோம் வாங்க.

தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள் – ஆறு, பொரிக்க தேவையான அளவு – எண்ணெய், சர்க்கரை – ஒரு கப், தண்ணீர் – இரண்டு கப், ஏலக்காய் – 2, முந்திரி பருப்பு – 15, நெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

பிரெட் அல்வா செய்வதற்கு பேக்கரியில் இருந்து பிரட் பாக்கெட் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆறு பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களில் இருக்கக்கூடிய பிரவுன் நிற தோல் பகுதியை வெட்டி எடுத்து விடுங்கள். வெள்ளையாக இருக்கக்கூடிய இந்த பிரட்டுகளை நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பொரிக்க தேவையான அளவிற்கு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு, எல்லா பிரட் துண்டுகளையும் போட்டு நன்கு கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பொன்னிறமாக சிவந்ததும் பிரட் துண்டுகளை எடுத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு வெள்ளை சர்க்கரை சேர்த்து அதனுடன் ரெண்டு கப் அளவிற்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்கள். சர்க்கரை பாகு ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு கொதிக்கும் இந்த பாகில் நீங்கள் பொரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பாகு வற்றி பிரட் துண்டுகள் நன்கு எல்லாவற்றையும் ஈர்த்துக் கொள்ளும் வரை கிண்டி விட வேண்டும். தண்ணீர் எல்லாம் வற்றி கெட்டியான பதத்திற்கு வந்ததும், ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் பொடித்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு நெய்யுடன் வறுத்த முந்திரி பருப்பையும் பிரெட் உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இனி தயிர் வடை செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செஞ்சு பாருங்க. ஹோட்டல்ல கொடுக்கிற அந்த டேஸ்ட் கொஞ்சம் கூட மாறாம அப்படியே இருக்கும்.

இவற்றுடன் இரண்டு ஏலக்காய்களை நன்கு இடித்து பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை நன்கு கிண்டி நெய் எல்லாம் ஒன்றோடு ஒன்று கலந்து அல்வா பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து கொள்ள வேண்டும். சிலர் இதனுடன் பால் சேர்த்து செய்வார்கள். பால் சேர்த்து செய்யும் பொழுது நீண்ட நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிட முடியாது. பால் சேர்க்காமல் வெறும் சர்க்கரை பாகில் செய்யும் பொழுது பத்து நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். சுவையாக இருக்கக்கூடிய இந்த பிரட் அல்வா பிரியாணியுடன் மட்டும் அல்ல, இனி அடிக்கடி வீட்டிலேயே செய்து சாப்பிடலாமே!

- Advertisement -