நாளை (26/5/2021) ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் ‘புத பகவான்’! அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யாரெல்லாம்? 12 ராசிக்குமான துல்லிய பலன்கள்!

budhan
- Advertisement -

நல்ல அறிவின் காரகத்துவம் கொண்ட புதபகவான் ஒரு ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் தான் ஜாதகர் புத்திசாலியாக இருப்பார்கள். தோல்விகளையும் வெற்றியாக மாற்றிக் காட்ட புத பகவானின் அருள் நமக்கு தேவை. ஒருவர் எந்த விஷயத்தில் கைதேர்ந்தவராக இருந்தாலும் அதற்கு அவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் தான் காரணமாக இருப்பார். அனைத்திலும் நிபுணத்துவம் பெற்றுள்ளதால் புத பகவானை ‘நிபுணன்’ என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஞானம், அறிவு ஆகியவற்றிற்கு தலைமையாக விளங்கும் புதன் பகவான் ‘வித்யாகாரகன்’ என்னும் பெயராலும் அழைக்கப்படுகின்றார்.

அத்தகைய புதன் பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாக ஒருமாத காலம் எடுத்துக் கொள்கிறார். மாதாமாதம் பெயர்ச்சியாகும் புதன் பகவான் இந்த மாதம் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகி நாளை புதன்கிழமையில் காலை 9:26 மணிக்கு ஆட்சி பெற்று அமர இருக்கின்றார். 12 ராசிக்காரர்களுக்கும் இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் இருந்து மூன்றாம் ராசியாக இருக்கும் மிதுனத்தில் புதன் பகவான் சஞ்சரிக்க இருப்பதால் சகோதர சகோதரிகளுடன் ஆன உறவில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேலை தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமான ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. மருத்துவ ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. கூடுமானவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

ரிஷபம்:
உங்கள் ராசிக்கு அடுத்த ராசியாக இருக்கும் மிதுன ராசியில் புதன் பகவான் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுடைய பேச்சாற்றல் சாதுர்யமானதாக இருக்கும். குடும்பத்திலும், சமூகத்திலும் உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் மரியாதை கொடுப்பார்கள். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. புதன் பகவான் வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

மிதுனம்:
புத பகவான் உங்கள் ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல பலன்களைக் கொடுக்க இருக்கிறார். இதுவரை உடல் ரீதியான பிரச்சினையும், மன ரீதியான பிரச்சனைகளையும் சந்தித்து வந்த நீங்கள் அதிலிருந்து விடுபட இருக்கிறீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

கடகம்:
உங்கள் ராசியிலிருந்து 12வது இடத்தில் விரய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் புத பகவான் குடும்பத்தில் சில பிரச்சினைகளை உண்டு பண்ணுவார். எனவே கூடுமானவரை குடும்பத்திற்குள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான தொலை தூர பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஹனுமன் வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் புதன் பகவான் சஞ்சாரம் செய்வதால் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். புதன் கிழமைகளில் பச்சை நிற உடை உடுத்திக் கொள்வது, புத பகவான் வழிபாடு செய்வது போன்றவற்றை செய்தால் நலன் காணலாம்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் பெயர்ச்சி தொழில் ஸ்தானத்தில் நடக்க இருப்பதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். நிலம், வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் சாதகமான பலன்களை காணலாம். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உங்களுக்குத்தான். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் வாய்ப்புகள் உண்டு. வரவுக்கு மீறிய செலவுகள் கட்டுக்குள் வரும். பிள்ளைகள் வழியே நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

துலாம்:
உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாம் இடமாகிய பாக்கிய ஸ்தானத்தில் புதபகவான் சஞ்சரிக்க இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும். பணம் பல வழிகளிலும் வந்து பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகப் பலன்கள் உண்டு. உடல்நலத்தில் அக்கறை தேவை. பூர்வீக சொத்து பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும் என்பதால் புத பகவான் வழிபாடு செய்வது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. பச்சை நிற பொருட்களையும், உடைகளையும் அடிக்கடி அணிந்து வர நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் புத பகவான் சஞ்சரிக்க இருப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நினைக்கும் பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செழிப்பாக இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு களஸ்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று புதபகவான் அமர இருப்பதால் தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. மருத்துவ ரீதியான செலவுகள் இருப்பதால் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகள் உடனான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை பொறுமையை கையாள்வது நல்லது. பச்சை காய்கறிகள், பச்சை நிற பொருட்கள் கொண்ட உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

மகரம்:
புத பகவான் உங்கள் ராசியில் இருந்து ஆறாம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் அமர இருப்பதால் கடன் பிரச்சினைகளும், ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே அவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான காலகட்டமாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கணவன் மனைவி இடையே அடிக்கடி சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு மறைந்தாலும் அன்பு அதிகரித்து காணப்படும். மஹாவிஷ்ணு வழிபாடு செய்துவர நல்லது நடக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் பூர்வ புண்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டபின் மறையும். கூடுமானவரை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற இறக்கமுடன் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதபகவான் மந்திரங்களை உச்சரிக்க நல்லது நடக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு நான்காம் இடமாக இருக்கும் சுகஸ்தானத்தில் அமர இருப்பதால் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நல்ல பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வு ஆகிய விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டு. உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும் என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேம்படும்.

- Advertisement -