கேரட் பீன்ஸ் சட்னி.

carrotbeans chutney
- Advertisement -

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும். ஆரோக்கியமான உணவுகள் என்று பார்க்கும் பொழுது அதிகப்படியாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய தலைமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு காய்கறிகள் கீரைகள் என்றாலே சுத்தமாக பிடிப்பதில்லை. காய்கறிகளை சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு கூட இந்த முறையில் காய்கறிகளை வைத்து சட்னி செய்து தரும் பொழுது அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கேரட் பீன்ஸை பயன்படுத்தி சட்னி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

கேரட்டில் விட்டமின் – ஏ, பி6, கே1, பொட்டாசியம், பயோட்டின் போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கிறது. கேரட்டை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்த அழுத்தம் குறைகிறது. கண்பார்வை கூர்மை அடைகிறது. எலும்பு வலுப்பெறுகிறது. பீன்ஸில் விட்டமின் பி6, சி, தைமின் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. செரிமான கோளாறுகள் நீங்குகிறது. வாய்வுத் தொல்லை நீங்குகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்:

  • உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1/4 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 6
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • வெங்காயம் சிறியது – 1
  • தக்காளி சிறியது – 1
  • கேரட் – 2
  • பீன்ஸ் – 10
  • கருவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் நன்றாக காய்ந்ததும் அதில் 1/2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்து, கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். லேசாக சிவந்த பிறகு, அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மறுபடியும் அதே கடாயை அடுப்பில் வைத்து 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

பிறகு தக்காளியை சேர்த்து தக்காளி வதங்கும் வரை வதக்க வேண்டும். இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு அதில் நறுக்கிய பீன்ஸை போட்டு வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து கேரட்டை போட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மூடி போட்டு மூன்று நிமிடம் வேக வைக்க வேண்டும். கேரட்டும் பீன்ஸும் நன்றாக வெந்த பிறகு அதில் கொத்தமல்லி தலையை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி ஆற வைக்க வேண்டும்.

- Advertisement -

நன்றாக ஆரிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் இந்த ஆரிய பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரைத்த இந்த சட்னியில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் கேரட் பீன்ஸ் சட்னி தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: பாம்பே சட்னி செய்முறை

சத்து மிகுந்த காய்கறிகளை குழந்தைகளோ பெரியவர்களோ உண்ண மறுக்கும் பொழுது அவர்களுக்கு தெரியாமல் இப்படி சட்னியாக செய்து கொடுத்து உண்ண வைக்கலாம்.

- Advertisement -