வீட்டில் உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும். குழந்தைகளுக்குப் பிடித்த கிரிஸ்பியான இந்த உருளைக்கிழங்கு உருண்டையை உடனே செய்து கொடுக்கலாம்

potato1
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் இல்லாமல் இருப்பதில்லை. அப்படி சமையல் என்று வரும்பொழுது குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும், அவர்கள் எவற்றை விருப்பமாக சாப்பிடுவார்கள் என்று யோசித்து அதன் பிறகு தான் அனைவரும் சமைக்க துவங்குகின்றனர். ஏனென்றால் குழந்தைகள் சாப்பிடாமல் விட்டுவிட்டால் பெற்றோர்களுக்கு மிகவும் கவலையாக தான் இருக்கும். எனவே குழந்தைகளுக்கு ஏற்ற சுவையிலும், காரம் குறைவாகவும் இருக்கும் உணவுகளை தான் சமைத்து கொடுக்கின்றோம். அவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிட ஒரு சுவையான உணவை இந்த உருளைக்கிழங்கை வைத்து எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு – 2, இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், மிளகு தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மைதா மாவு – 2 ஸ்பூன், சீஸ் – 4 கியூப், எண்ணெய் – கால் லிட்டர், பிரட் துண்டுகள் – 5, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி, 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரை திறந்து, உருளைக்கிழங்கை வெளியே எடுத்து, தோல் நீக்கி, மேஷர் வைத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகு தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள், அரை ஸ்பூன் உப்பு மற்றும் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தையும் நன்றாகப் பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஐந்து பிரட் துண்டுகளை அதன் ஓரத்தில் உள்ள சிவந்த பகுதிகளை நீக்கிவிட்டு, மற்றதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த பிரட் துகளை ஒரு தட்டில் மாற்றிக் கொண்டு, அதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

பிறகு இரண்டு ஸ்பூன் மைதாவை ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் கால் ஸ்பூன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து லிக்விட் பேஸ்ட் பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 4 க்யூப் சீஸை நன்றாகத் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கையில் லேசாக எண்ணெய் தடவி பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை சிறிய உருண்டைகளாக எடுத்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து கட்டை விரலை வைத்து அழுத்தி அதில் துருவிய சீஸை அரை ஸ்பூன் அளவு வைத்து விட்டு மாவினை உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும். (சீஸ் இல்லாமலும் இந்த உருண்டைகளை அப்படியே பொரித்து எடுக்கலாம்) பிறகு இந்த உருண்டையை மைதா மாவு கலவையில் முழுவதுமாக நனைத்து, பின்னர் அதனை பிரட்டில் நன்றாக உருட்டி எடுக்க வேண்டும். பிறகு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், உருட்டி எடுத்த அனைத்து உருண்டைகளையும் எண்ணெயில் போட்டு சிவந்து வரும் வரை பொரித்தெடுக்க வேண்டும்.

- Advertisement -