அந்த காலத்தில் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம். பிள்ளைகளுக்கு ஸ்நாக்ஸ் அதாவது திண்பண்டம் செய்தவதெல்லாம் ஒரு விசயமே இல்லை. பெரியவர்கள் எப்போதும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்னற செய்து வைத்து விடுவார்கள். முறுக்கு, தட்டை, சீடை, அதிரசம் இப்படி பல திண்பண்டங்களை வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்து கொடுத்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை ஸ்னாக்ஸ் என்றாலே பெரும்பாலும் பாலித்தீன் கவர்களில் அடைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட பொருட்களை தான் நம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறோம். இதில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறி தான். வீட்டிலே எல்லாம் செய்து வைக்கும் அளவிற்கு இன்றைய இல்லத்தரசிகளுக்கு நேரம் இருப்பதில்லை என்றாலும் பத்து நிமிடத்தில் வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் நல்ல ருசியாகவும் செய்து கொடுக்கக்கூடிய ஒன்று தான் இந்த எள்ளுருண்டை. இதை செய்ய அதிக நேரம் ஆகாது அதே நேரத்தில் அதிக செலவும் கிடையாது.
தேவையான பொருட்கள்:
வெல்லம் – 300 கிராம், எள்ளு – 250 கிராம்
அவ்வளவுதான் இந்த இரண்டே பொருள்களைக் கொண்டு இந்த எள்ளுருண்டை செய்துவிடலாம் . முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நன்றாக சூடானதும் எள்ளை கொட்டி வறுத்துக் கொள்ள வேண்டும். எள்ளு வாங்கும் போது பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். எள்ளில் மண் தூசி போன்றவை இருக்கக் கூடாது.
ஏனென்றால் இதை வாங்கி நாம் அப்படியே தான் வறுக்க போகிறோம். எனவே வாங்கும் போதே நல்ல தரமான எள்ளாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். வாணலி நன்றாக சூடான பின்பு தான் எள்ளை போட வேண்டும். போட்டு ஒரு இரண்டு நிமிடம் எள் நன்றாக வறுபட்டதும் வாசம் வரும், பின் எள் ஓவ்வொன்றாக வெடிக்க ஆரம்பிக்கும், இப்படி வெடிக்க ஆரம்பித்தாலே எள் வறுப்பட்டு விட்டது என்று அர்த்தம். அடுப்பில் இருந்து எள்ளை இறக்கிவிடலாம். பின் அதை நன்றாக ஆற விடுங்கள். ஆறிய பின் நீங்கள் வறுத்த எள்ளில் பாதி அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும், நைசாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. சற்று கொரகொரப்பாகவே அரைத்துக் கொள்ளுங்கள்.
இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து வெல்லத்தை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பாகு காய்ச்ச வேண்டும். இதில் பாகுபதம் வரும் வரை கவனமாக பார்க்க வேண்டும். இதிலும் வெல்லத்தை இப்படி காய்ச்சும் முன் பார்த்துக் கொள்ளுங்கள்.
சில வெல்லத்திலும் மண்ணிருக்கும் அப்படியிருக்கும் பட்சத்தில் அதை நன்றாக நீரில் கரைத்து வடிகட்டிய பின் இந்த பாகு எடுக்க சேர்த்துக் கொள்ளுங்கள். பாகு பதத்திற்கு அதிகபட்சம் ஆறு அல்லது ஏழு நிமிடம் வரை வெல்லத்தை நன்றாக கொதிக்க விட வேண்டும். வெல்லம் கொதி வந்தவுடன், அடுப்பை சிம்மில் வைத்து கிண்டி விட்டுக் கொண்டே இருங்கள், பாகு பதம் வந்துவிட்டதா என்பதை அறிய ஒரு தட்டில் சிறிது தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள் அந்த தண்ணீரில் மேல் நீங்கள் காய்ச்சிக் கொண்டிருக்கும் பாகை ஊற்றினால் நீரில் கரையாமலும் தட்டில் ஒட்டாமலும் உருட்டையாக வர வேண்டும். அவ்வளவுதான் இந்த பதம் வந்தவுடன் நீங்கள் வறுத்து வைத்துள்ள எள்ளையும் பாதி பொடித்து வைத்துள்ள எள்ளையும் ஒன்றாக கொட்டி இரண்டு நிமிடம் நன்றாக வெல்லத்துடன் கலக்கும் வரை கிண்டி விடுங்கள். அவ்வளவுதான் எள்ளுருண்டை ரெடியாகிவிட்டது.
இப்போது இதை உடனடியாக சூட்டுடன் உருண்டை பிடிக்க முடியாது. நம் கை சூடு பொறுக்கும் அளவிற்கு வந்தவுடன் கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு உருண்டை பிடித்து விடலாம். அதிக நேரம் ஆற விட்டால் இந்த எள்ளும் வெல்லமும் சேர்ந்து மிகவும் கட்டியாக ஆகிவிடும். எனவே அதை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவில் சிறியதாகவோ பெரியதாகவோ உருண்டைகளை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான எள்ளு உருண்டை வீட்டிலே குழந்தைகளுக்கு தயாராகிவிட்டது. இந்த எள் உடம்பிற்கும் நல்லது.
இதில் அதிக அளவு கால்சியம் நிறைந்து இருப்பதால் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கூட இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். அது மட்டும் இன்றி இளநரை, முடி கொட்டுதல், ஜீரணக் கோளாறு இது போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த எள் ஒரு நல்ல மருந்து.