வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலக

vinayagar nilaivasal
- Advertisement -

எதிர்மறை ஆற்றலால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அவருக்கு எந்த வகையிலும் முன்னேற்றம் என்பதே இருக்காது. மேலும் அவரை சுற்றி பலவிதமான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் விநாயகர் பெருமானை எப்படி வழிபட்டால் எதிர்மறை சக்திகளில் இருந்து விடுபட முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கிரகங்களின் சூழ்நிலைக்கேற்றவாறோ அல்லது எதிர்மறை ஆற்றல்களினாலோ அல்லது தீய எண்ணத்துடன் மற்றவர்கள் செய்யும் செயல்களாலோ ஒருவருக்கு தடைகளும், தடங்கல்களும், தாமதங்களும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வினைகளை தீர்க்கும் விநாயகரை வழிபட்டால் அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் விலகும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்வதற்கு பெரிதும் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. நமக்கு ஒரே ஒரு பொருள் இருந்தால் போதும். அந்த பொருளின் உதவியோடு விநாயகப் பெருமான் நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் வாரி வழங்குவார். அப்படிப்பட்ட பொருள்தான் அருகம்புல். இந்த வழிபாட்டை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொண்டாலே போதும். இந்த வழிபாட்டை திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை இந்த மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும். இந்த வாரம் எந்த கிழமையில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறோமோ அதே கிழமை அன்று தான் தொடர்ந்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சொன்னது போல் இந்த வழிபாட்டிற்கு அருகம்புல் மட்டும் இருந்தாலே போதும். விடியற்காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு அருகம்புல்லால் விநாயகப் பெருமானுக்கு நமக்கு தெரிந்த நாமாவளிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி எந்தவித போற்றிகளும் தெரியாது என்பவர்கள் வினைகளை தீர்க்கும் விக்னேஸ்வரரை போற்றி என்ற மந்திரத்தை 108 முறை கூறி அருகம்புள்ளால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு கற்பூர தீபாராதனை காட்டி மனதார வழிபட்டுவிட்டு அர்ச்சனை செய்த அருகம்புல் அனைத்தையும் எடுத்து சிகப்பு நிற நூல் அல்லது மஞ்சள் நிற நூலால் நன்றாக கட்ட வேண்டும். கட்டிய இந்த அருகம்புல்லை வீட்டு நிலை வாசலின் மேல் மாவிலை தோரணம் வைத்திருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். விநாயகப் பெருமானின் அருளை முழுமையாகப் பெற்ற அந்த அருகம்புல்லைத் தாண்டி வீட்டிற்குள் எந்த வித தீய சக்தியாலும் வர முடியாது என்பதுதான் உண்மை.

அது மட்டுமல்லாமல் கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்கள் வீட்டிற்குள் வர நினைத்தால் கூட அந்த அருகம்புல்லை தாண்டி வரும் பொழுது அவர்களின் கெட்ட எண்ணங்கள் அனைத்தும் மறைந்துவிடும். அடுத்த வாரம் இதே போல் அருகம்புல்லால் அர்ச்சனை செய்து பழைய அருகம்புல்லை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிய அருகம்புல்லை மாட்டி வைத்து விட வேண்டும். இதை தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: நோய்கள் தீர செய்ய வேண்டிய தானம்.

மிகவும் எளிமையான முறையில் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் விலக்கி நமக்கு நல்ல வழியை காட்டும் அற்புதமான கடவுளாக விநாயகப் பெருமான் திகழ்கிறார்.

- Advertisement -