இன்று அதிகாலையில் விசாகப்பட்டினத்தில், விஷவாயு கசிந்து சாலையில் கொத்து கொத்தாக மக்கள் மயங்கி விழுந்த சம்பவம். வீடுகளை விட்டு வெளியேறும் ஆந்திர மக்கள்.

vizag-gas-leak4
- Advertisement -

இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் தனியார் ஆலை ஒன்றில் இருந்து விஷ வாயு கசிந்து வெளியேறி, அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விஷவாயு தாக்கத்தினால் சாலைகளில் ஆங்காங்கே மக்கள் கொத்துக் கொத்தாக மயங்கி விழுந்து கொண்டிருக்கின்றனர். ஏராளமான கால்நடைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த துயர சம்பவத்தால் இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஷவாயு கசிந்து உள்ள தனியார் ஆலையின் உள்ளே தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இது தொடர்பாக இணையதளங்களில் மற்றும் தொலைக்காட்சிகளில் வீடியோக்கள் வைரலாகி பரவி வருகின்றன. அதில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திடீரென சாலையிலேயே மயங்கி விழும் காட்சிகள் பதிவாகி இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோபாலபட்டினம் என்ற இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் தொழிற்சாலையின் பெயர் ‘எல்.ஜி.பாலிமர்ஸ்’. இது ஒரு கெமிக்கல் ஆலை. இந்த ஆலையில் இருந்து ‘ஸ்டைரீன்’ என்ற ரசாயன வாயு அதிகாலை இரண்டரை மணி அளவில் கசிந்து வெளியேறியுள்ளது. இதன் தாக்கம் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பரவி உள்ளதால் ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களில் இருக்கும் மக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். வீடுகளை விட்டு மக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விஷ வாயு கசிந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 200க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷவாயு கசிவினால் மக்களுக்கு மூச்சு விடுவதில் சிரமமும், வாந்தியும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சிறுவர், சிறுமிகள் மயங்கி விழும் காட்சிகளையும், அவர்களை பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காட்சிகளையும் பார்க்கும் பொழுது நெஞ்சம் பதைபதைக்கும் வண்ணம் உள்ளது.

ஆலையிலிருந்து வெளிவரும் விஷ வாயுவின் வீரியத்தை கட்டுபடுத்த மாநகராட்சி சார்பில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அப்பகுதியை சுற்றி இருக்கும் மக்களுக்கு ஈரத் துணியால் முகத்தை மூடி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டிருக்கும் மக்களுக்கு இந்த சம்பவம் மேலும் வேதனை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -