ஆஞ்சநேயருக்கு 9 அவதாரமா? அசர வைக்கும் ஹனுமர் அவதாரங்களும், வழிபடும் முறையும், பலன்களும் யாவன?

hanuman-anjaneyar
- Advertisement -

ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் பல அவதாரங்களை எடுத்து மக்களை காத்தருள்கின்றார் என்கின்றன புராணங்கள். சிவ அவதாரங்கள், விஷ்ணு அவதாரங்கள் என்று முக்கிய கடவுள்களின் அவதாரங்களும், அவர்களை வழிபடும் முறைகளும், பலன்களும் நாம் ஓரளவுக்கு அறிந்து வைத்திருப்போம் ஆனால் எல்லோருக்கும் பிடித்தமான ஆஞ்சநேயருக்கு நவ அவதாரங்கள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? நவ வியாக்ரண பண்டிதன் என்று அழைக்கப்படும் ஹனும அவதாரங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்கிற சுவாரசிய ஆன்மிகத் தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்:
ராமாயணத்தில் பெரும் பங்கு வகித்த அனுமனை பற்றிய புராணங்களை கேட்கும் பொழுது நமக்கு மெய் சிலிர்க்கும். அதில் மிக மிக முக்கியமாக அமைந்திருப்பது பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரமாக இருக்கிறது. ராமாயண போரின் பொழுது ராமனையும், லட்சுமணனையும் சித்து வேலைகள் புரிந்து, ஏமாற்றி, தூக்கி சென்றார் மயில்ராவணன். இந்த மயில் ராவணனை அழிக்க ஆஞ்சநேயர் எடுத்த அவதாரம் தான் பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் ஆகும். வானர, வராக, ஹயக்ரீவ, நரசிம்ம, கருட முகங்களை கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் எதிரிகள் தொல்லை நீங்கி மனோதிடம் அதிகரிக்கும்.

- Advertisement -

நிருத்த ஆஞ்சநேயர்:
ராமருக்கும், ராவணனுக்கும் இடையே சண்டை நடந்த பொழுது ராமனுக்கு உதவிய அனுமன் போரிடுவது போல பாவனையோடும், உக்கிரமாகவும் காட்சி கொடுக்கின்றார். இத்தகைய தோற்றத்தில் ஹனுமனை வணங்குபவர்களுக்கு எத்தகைய இடர்கள் இருப்பினும் நொடியில் நீங்கும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே தீராத துயர் தீர, நிருத்த ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

கல்யாண ஆஞ்சநேயர்:
ஹனுமன் பிரம்மச்சரியர் என்கிற விஷயம் தெரிந்தவர்களுக்கு அவருக்கு திருமணம் ஆன இந்த செய்தியும் தெரிந்திருக்க வேண்டாமா? சஞ்சீவி மலையை கையில் ஏந்திக் கொண்டு பறந்து வந்து கொண்டிருந்த பொழுது, அவருடைய வியர்வைத்துளி சமுத்திரத்தில் விழுந்து அதை ஒரு மீன் வடிவில் இருந்த தேவகன்னி விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தேவ கன்னிகைக்கு அழகிய மகன் ஒருவன் பிறந்தான். அவன் பெயர் மகரத்வஜன். சுவர்ச்சலா என்கிற அந்த தேவ கன்னிகையை பின்னர் ஹனுமன் மணந்ததாக கதை உண்டு. கருத்தொருமித்த தம்பதிகளாக இருந்த இவர்களை வணங்கினால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க கல்யாண ஆஞ்சநேயரை வழிபடுவார்கள்.

- Advertisement -

பால ஆஞ்சநேயர்:
பாலகனாக இருக்கும் ஆஞ்சநேயர் உடைய வடிவமே பால ஆஞ்சநேயர் வடிவம் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வளவு சுட்டி தனமாக இருந்தாரோ அதே போல அஞ்சனையின் மகனாக இருக்கும் இவரும் ரொம்பவே சுட்டி தனத்தோடு செல்லமாக வளர்ந்து வந்தவர் ஆவார். இவர் பாலக வடிவத்தில் அன்னை அஞ்சனை உடன் இருக்கும் அவதாரத்தை வழிபட்டால் நீண்ட நாள் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது நியதி.

வீர ஆஞ்சநேயர்:
சுட்டி தனமாக இருந்த அஞ்சநேயர் ஒருமுறை ஒரு முனிவரின் தவத்தைக் கலைத்து சாபத்தை வாங்கிக் கொண்டார். இதனால் தன்னுடைய சக்தி என்ன? என்பதை அவர் மறக்க நேர்ந்தது. அந்த சமயத்தில் ராமர் மீது கொண்ட பக்தியின் காரணமாக கடல் கடந்து இலங்கைக்கு சென்று சீதையை கண்டுபிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னால் எப்படி செய்ய முடியும்? என்று யோசித்துக் கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு, ஜாம்பவான் என்பவர் அவரது பிறப்பு பற்றிய விஷயத்தை கூறி ஞாபகப்படுத்தினார். அதன்பின் அவர் எடுத்த விஸ்வரூப தோற்றமே வீர ஆஞ்சநேயர் ஆகும். வீரம் மிகுந்த இந்த ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு எவரையும் எதிர்கொள்ளும் துணிச்சல் தன்னாலே வந்துசேரும்.

- Advertisement -

பக்த ஆஞ்சநேயர்:
பக்த ஆஞ்சநேயர் இருகரம் கூப்பி பக்தர்களை வணங்குவது போல காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் தானே அவரை வணங்க வேண்டும்? அவர் ஏன் நம்மை வணங்குகிறார் தெரியுமா? ஆஞ்சநேயரை வணங்கி வரும் பக்தர்களாகிய நாம், ராம நாமத்தை உச்சரித்து வழிபடுவது வழக்கம். ராமனுடைய நாமம் ஒலி, ஒளி வடிவத்தில் எங்கு தென்பட்டாலும், கேட்டாலும் ராமரே வந்திருப்பதாக நினைத்து ஆஞ்சநேயர் வணங்குவார். இந்த தோற்றத்திற்கு பக்த ஆஞ்சநேயர் என்கிற பெயருண்டு. இதனை பல்வேறு கோவில்களில் இன்றும் நாம் காண முடியும். பக்த ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு அகந்தை அழிந்து பணிவு உண்டாகும் என்பது நம்பிக்கை.

யோக ஆஞ்சநேயர்:
ராம அவதாரம் முடிந்ததும் மகாவிஷ்ணு வைகுண்டம் செல்லும் பொழுது ஹனுமன், உடன் செல்லவில்லை ஏன் தெரியுமா? ராமநாமம் பூலோக வாசிகளால் உச்சரிக்க படுவதை ஹனுமன் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் இன்புற்று, தன்னை யோக நிஷ்டையில் அமர்த்திக் கொண்டு தியானத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். எனவே அவர் வைகுண்டம் செல்ல மறுத்து இங்கேயே நம்முடன் தங்கிவிட்டார் எனவே இன்றளவிலும் யோக நிஷ்டையில் இருக்கும் ஆஞ்சநேயர் தோற்றத்தை வணங்குபவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்:
தோஷங்கள் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் உண்டு என்பதை உணர்த்த ராவணனைக் கொன்ற ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. இதனைப் போக்க சிவபூஜை செய்ய வேண்டும். இதனால் சிவலிங்கத்தை காசிக்கு சென்று கொண்டு வர உத்தரவிட்டார் ராமர். ஆனால் உரிய நேரத்தில் அனுமனால் லிங்கத்தை கொண்டு வர முடியவில்லை, எனவே சீதை கடல் மண்ணை கொண்டு லிங்கம் செய்து பூஜையை முடித்து விட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ஆஞ்சநேயரின் துயர் தீர்க்க, அவர் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து மீண்டும் பூஜை செய்தார் ராமர். ராமர் பிரதிஷ்டை செய்து ஆஞ்சநேயர் வணங்கும் இந்த அபூர்வ கோலத்தை சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர் என்று கூறுவதுண்டு. இவரை வணங்கினால் நம்மைப் பிடித்திருக்கும் எத்தகைய தோஷங்களும் அகலும் என்பது நம்பிக்கை.

சஞ்சீவி ஆஞ்சநேயர்:
ராமருக்கும், ராவணனுக்கும் இடையேயான போரில் நஞ்சு தடவிய அம்பை எய்ததால் லக்ஷ்மணன் மூர்ச்சை அடைந்துவிட்டார். அவரின் உயிர் காக்க விபீஷணர், ஆஞ்சநேயரை சஞ்சீவி மலைக்கு சென்று மூலிகையைப் பறித்து வருமாறு கூறினார். ஆனால் அந்த மலையில் சஞ்சீவி மூலிகை எது? என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார். இன்னும் நேரம் கடந்தால் லக்ஷ்மணன் உயிருக்கு ஆபத்து என்பதால் அந்த மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தார் ஆஞ்சநேயர். சஞ்சீவி மலையுடன் பறந்து வரும் இந்த தோற்றமே சஞ்சீவி ஆஞ்சநேயர் தோற்றம் ஆகும். இந்த அவதாரத்தை வணங்குபவர்களுக்கு எத்தகைய தீரா பிணிகளும் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை. நவ வடிவங்களில் நெஞ்சை கிழித்து அதில் ராமர், சீதை இருப்பதை உணர்த்திய வடிவமும் ஒன்றாக தசாவதாரம் எடுத்த ஆஞ்சநேயரை என்றென்றும் போற்றி வணங்குபவர்களுக்கு தோல்வியே கிடையாது.

- Advertisement -