இளவரசியை மணக்க மறுத்த இளைஞன் – விக்ரமாதித்தன் கதை

vikramathithan-story-1
- Advertisement -

ஒரு மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காட்டிலிருந்த உடலை விக்ரமாதித்தியன் சுமந்து சென்றுகொண்டிருக்கும் போது, அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தியனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. இதோ அந்த கதை.

vikramathithan kathai

ஒரு சமயம் விஜயபுரி என்ற நாட்டில் குருபசேனன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பிறவியிலேயே அவனது கால்களில் சற்று குறைபாடு இருந்ததால் மற்றவர்களைப் போல் அவனால் இயங்க முடியாமல் இருந்தது. மேலும் குருபசேனனின் தாய் அவன் சிறுவனாக இருந்த போதே இறந்துவிட்டதால், அவனது தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அப்படி குருபசேனனுக்கு சித்தியாக வாய்த்த அவன் தந்தையின் இரண்டாவது மனைவி, குருபசேனனின் உடல் குறைபாட்டை அடிக்கடி சுட்டிக்காட்டி அவனை இடித்துரைத்து வந்தாள். இதனால் வாழ்க்கையில் ஒரு விரக்தியான நிலையில் இருந்து வந்தான் குருபசேனன்.

- Advertisement -

அப்போது அந்த நாட்டின் இளவரசியான “இந்துமதிக்கு” அவளின் தந்தையான அந்த நாட்டின் அரசன் திருமணம் செய்ய பல இளவரசர்கள் கலந்து கொள்ளும் ஒரு சுயம்வரத்தை ஏற்பாடு செய்தான். அப்போது இந்துமதி தாம் ஏற்பாடு செய்யும் போட்டியில் கலந்து தனது வீரத்தை நிரூபிக்கும் நபரை மட்டுமே தாம் திருமணம் செய்யப்போவதாக திட்டவட்டமாக கூறிவிட்டாள். அவள் கூறியபடியே ஒரு உயரமான நடைமேடையில் இருபுறமும் கூர்மையான கத்திகளுக்கு மத்தியில் சிறு கீறல் கூட படாமல் நடந்து சென்று சற்று தூரத்திலிருக்கும் மணல்திட்டின் மீது குதிக்கும் நபரை இளவரசி இந்துமதி திருமணம் செய்துகொள்வார் என்று மன்னர் அறிவித்தார். இதைக் கேட்டு பல இளவரசர்கள் அங்கு கூடினாலும் யாரும் அந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

vikramathithan

அப்போது அங்கு வந்திருந்த குருபசேனன், தான் இப்போட்டியில் கலந்து கொள்ள மன்னனிடம் அனுமதி கேட்டான். அவனது உடலின் குறைபாட்டை கண்டு முதலில் தயங்கினாலும் பிறகு அனுமதியளித்தார் மன்னர்.அதே நேரத்தில் இந்த போட்டியில் ஒருவேளை குருபசேனன் வெற்றி பெற்றால் அவனுக்கு தனது மகளை திருமணம் செய்ய வேண்டி வருமே என கவலையும் கொண்டார் மன்னர்.

- Advertisement -

அப்போது போட்டியில் கலந்துகொண்ட குருபசேனன், இளவரசியின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் வெற்றி பெற்றான். இதனால் இளவரசி இந்துமதியும் குருபசேனனை மணந்து கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆனால் குருபசேனன் அவளை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டான். “விக்ரமாதித்தியா போட்டியில் வெற்றிபெற்ற பின் சாதாரண குடியில் பிறந்த குருபசேனனுக்கு அந்த நாட்டின் இளவரசியையே மணந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியும் அதை ஏன் மறுத்தான்? இதற்கான விடை உனக்கு தெரிந்தால் கூறு” என்றது வேதாளம்.

vikramathitan

“குருபசேனன் பல காலமாகவே தனது அங்க ஊனத்தை குறித்து தனது சித்தி குறை கூறியதால் வாழ்வில் மிகவும் நொந்து போயிருந்தான். அப்படிப்பட்டவன் இப்போட்டியை பற்றிக் கேள்விபட்டவுடன் அதில் கலந்து கொண்டு தன்னை போன்ற ஒருவனாலும் எதையாவது சாதிக்க முடியும் என்று உலகிற்கு நிரூபிக்க, இப்போட்டியில் தனது உயிரைப்பற்றி கவலைப்படாமல் கலந்து கொண்டான். அதில் வெற்றி அல்லது தோல்வி பெறுவதைப் பற்றி அவன் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை.

- Advertisement -

vikramathithan

அதே நேரத்தில் போட்டியில் வென்று அந்நாட்டின் இளவரசியே அவனை மணக்க சம்மதம் கூறியும் ஒரு நாட்டிற்கு ஆபத்து நேரும் காலத்தில் அதை எதிர்த்து சமாளிக்கக்கூடிய உடல்தகுதி தனக்கு இல்லை என்ற நியாயமான காரணத்தை கூறி அந்த இளவரசியை திருமணம் செய்ய மறுத்தான் குருபசேனன்” எனும் பதிலை விக்ரமாதித்தியன் கூறியவுடன் அந்த வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

இதையும் படிக்கலாமே:
யார் மிகவும் மென்மையான பெண் – குட்டி கதை

இது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள் மற்றும் சிறு கதைகள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -