அடை வார்க்க இனி மாவு அரைத்து கஷ்டப்பட வேண்டாம். இன்ஸ்டன்ட் அடை மிக்ஸ் அரைப்பது எப்படி?

adai2
- Advertisement -

அடை சாப்பிட வேண்டுமென்றால் அரிசி பருப்பு வகைகளை ஊறவைத்து அதன் பின்பு மாவு ஆட்டி அடை சுட்டு சாப்பிடுவதற்க்குள், அடை சாப்பிடும் ஆசையை விட்டு போய்விடும். உடனடியாக அடை சாப்பிட வேண்டும் என்றால் இந்த இன்ஸ்டன்ட் அடை மாவு இருந்தால் போதும். சட்டுனு சுடச்சுட சூப்பர் அடையை தயார் செய்துவிடலாம். தனியாக ரூம் எடுத்து தங்கி படிப்பவர்களுக்கு, வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த ரெடிமேட் அடை மிக்ஸ்‌ செய்து கொடுத்தால் அவர்களுக்கு இது மிக மிக பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இன்ஸ்டன்ட் அடை மிக்ஸ் சுலபமாக அரைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

adai3

முதலில் இந்த அடை மாவு அரைப்பதற்கு தேவையான பொருட்களை பார்த்து விடலாம். பச்சரிசி 1/2 கப், இட்லி அரிசி – 1/2 கப், துவரம்பருப்பு – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், உளுந்து – 5 ஸ்பூன், பாசிப் பருப்பு – 5 ஸ்பூன், வரமிளகாய் – 5, கறிவேப்பிலை – 4 கொத்து, உப்பு – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – சிறிய துண்டு.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் நன்றாக வெயில் இருக்கும் என்றால் இந்த எல்லா பொருட்களையும் வெயிலில் இரண்டு மணி நேரம் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளலாம். வெயில் இல்லாதவர்கள், வெயிலில் பொருட்களை காய வைக்க முடியாது என்பவர்கள் இந்த எல்லா பொருட்களையும் கடாயில் ஒவ்வொன்றாக போட்டு லேசாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும்.

adai

பச்சரிசி, இட்லி அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம் பாசிப்பருப்பு, இந்த 6 பொருட்களையும் எண்ணெய் ஊற்றாமல் லேசாக கடாயில் போட்டு சூடு படுத்தி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதே கடாயில் 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, வரமிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பெருங்காய கட்டியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கருவேப்பிலையை போட்டு மொறுமொறுவென்று வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆறவைத்த இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு, எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் உப்பையும் இதோடு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் அரைத்த சூடு மாவில் இருக்கும் அல்லவா. அதை நன்றாக ஆற வைத்து, இதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் மூன்று மாதங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. நமக்கான அடைமாவு இப்போது கிடைத்துவிட்டது. இந்த மாவு பொடியாக ரவை பக்கத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

adai1

தேவைப்படும்போது இந்த அடை மாவை எப்படி பயன்படுத்துவது. 1 கப் அளவு அடை மாவை எடுத்துக் கொண்டால், அதே 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பை போட்டு, நன்றாக கறைத்து மூடி போட்டு 1 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். ஒரு மணிநேரம் ஊறிய பின்பு அடை மாவு தயாராக இருக்கும். தண்ணீரை உறிஞ்சி மாவு கட்டு பதத்தில் இருக்கும். இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அடைமாவு பக்குவத்தில் கரைத்து தோசை கல்லில் அடை போல வார்த்து, சுடச்சுட பரிமாற வேண்டியது தான். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி இருந்தால் கூட போதும். அட்டகாசமான அடை தயார். உங்களுக்கு இந்த குறிப்பு இருந்தா உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -