ஜாதகம் உள்ளவர்கள் தங்களுடைய ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து, தங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதற்கு ஏற்ப பரிகாரங்களை செய்து கொள்வார்கள். ஜாதகம் இல்லாதவர்கள் என்ன செய்வது. ஜாதகம் இல்லை என்றாலும் அவர்களுக்கு பிறவியில் இருக்கக்கூடிய தோஷங்களை சரிசெய்ய ஆன்மீக ரீதியாக பின் சொல்லக்கூடிய பரிகாரங்களை செய்து வந்தாலே போதும். உடைய வாழ்வும் பிரகாசமாக இருக்கும்.
முதலாவதாக ஜாதகம் இல்லாதவர்கள் மலைமீது இருக்கக்கூடிய முருகனை அடிக்கடி சென்று தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு மலை முருகன் கோவில்களுக்கு செல்லும் போது அங்கு இருக்கும் குரங்குகளுக்கு உங்களால் முடிந்த உணவு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். வாழைப்பழம், தேங்காய் போன்ற பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கக்கூடிய தோஷங்கள் விலகும்.
அடுத்தபடியாக ஏதாவது ஒரு கோயிலிலோ அல்லது ஆற்றங்கரை, குளத்தங்கரை ஓரத்திலோ ஒரு அரச மரக் கன்றை நட்டு வைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி அதை மரமாக வளர்த்து வரும் போது கண்ணுக்கு தெரியாத தோஷங்கள் விலகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஜாதக கட்டம் இல்லாதவர்கள் மகான்களை வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல ஜாதகம் இல்லாதவர்கள் அடிக்கடி பெரியவர்களைக் கண்டால் அவர்களுடைய காலில் விழுந்து நமஸ்காரம் வாங்கிக் கொள்வது நல்லது. ஜாதகம் இருப்பவர்களாக இருந்தால் கூட பெரியவர்களின் பாதங்களைப் பணிந்து நமஸ்காரம் வாங்கிக் கொள்வது சிறப்பான ஒரு விஷயம்தான்.
அடுத்தபடியாக பசுமாட்டிற்கு வெற்றிலை அருகம்புல் வாழைப்பழம் அகத்திக்கீரை போன்ற உங்களால் முடிந்த உணவு பொருட்களை வாங்கிக் கொடுத்து பசு மாட்டின் பின்பக்கத்தை தொட்டு வணங்குவது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். இதற்கு நாள் கிழமை எல்லாம் பார்க்க வேண்டாம். உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பசுமாட்டிற்கு உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்துக்கொண்டே இருங்கள்.
ஜாதக கட்டம் இல்லாதவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதை கணிப்பதற்கு பிரசன்ன ஜோதிடம் பார்க்கலாம். ஜாதகமே இல்லை என்றாலும் ஒருவருடைய வாழ்க்கையின் நல்லது கெட்டதை சரியான முறையில் கணிக்க பிரசன்ன ஜோதிடம் நமக்கு நல்வழி காட்டி தரும். எனக்கு ஜாதகமே இல்லை என்ற கவலை உங்களுக்கு இனி வேண்டாம். ஜாதகம் இல்லாதவர்களுக்கு அந்த இறைவனே எப்போதும் துணையாக இருக்க மேல் சொன்ன சின்ன சின்ன பரிகாரங்களை செய்து வந்தாலே போதும். உங்களுடைய வாழ்வு சிறப்படையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.