எச்சில் ஊறும் சுவையுடன் கருவாட்டு பிரியாணி ஒரு முறை இப்படிசெய்து பாருங்கள் குண்டான் முழுவதும் காலியாகி விடும்

briyani
- Advertisement -

என்ன தான் நாம் சிட்டியில் இருந்தாலும் கருவாடு என்றவுடன் நாவில் எச்சில் ஊறத்தான் செய்யும். கருவாட்டினை குழம்பு வைத்து, பொறியல் செய்து மட்டுமே சாப்பிடும் நம்ம ஊர்க்காரர்களுக்கு கருவாட்டை வைத்து செய்யக்கூடிய இந்த சுவையான பிரியாணியையும் மிகவும் பிடிக்கும். இந்த புதுவிதமான கருவாட்டு பிரியாணியை எப்படி செய்வது என்பதனை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

karuvadu

தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் கருவாடு – 200 கிராம், சீரக சம்பா அரிசி – 1/4 கிலோ, சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 2, இஞ்சி, பூண்டு விழுது – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், பிரிஞ்சி இலை – ஒன்று, எண்ணெய் – 5 ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒன்றரை ஸ்பூன்.

- Advertisement -

பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
பட்டை சிறிய துண்டு – இரண்டு, ஏலக்காய் – 5, அன்னாசி பூ – 3, கிராம்பு – 5, பெரிய பிரிஞ்சி இலை – ஒன்று, முழு தனியா – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன்.

செய்முறை:
முதலில் 200 கிராம் நெத்திலி கருவாட்டை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் நான்கு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும். ஐந்து நிமிடம் கருவாடு ஊறிய பிறகு அதன் தலைப் பகுதியை கில்லி விட்டு, முன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு, மூன்று முறை தண்ணீர் மாற்றி நன்றாக கழுவி வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு கப் சீரக சம்பா அரிசியுடன் தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மிளகு, சீரகம், சோம்பு, அன்னாசி பூ போன்றவற்றை நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

biriyani

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, அதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அவற்றுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

biriyani1

பின்னர் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் நன்றாக கொதித்த உடன் சுத்தம் செய்த கருவாட்டையும் ஊற வைத்துள்ள அரிசியையும் இதனுடன் சேர்க்க வேண்டும். கருவாடு சேர்த்தவுடன் உப்பின் அளவை சரி பார்த்து தேவையான உப்பைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 25 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சிறிது நேரத்தில் சுவையான கருவாட்டு பிரியாணி தயாராகி விடும். ஒரு முறை இவ்வாறு கருவாடு வைத்து சமைத்து பாருங்கள் இதன் சுவை நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு அற்புதமாக இருக்கும்.

- Advertisement -