1 கப் இட்லி மாவு இருந்தால் போதும். சூப்பரான கோயம்புத்தூர் ஸ்டைல் குட்டி குட்டி கார போண்டா தயார்.

kutti-bonda
- Advertisement -

கோயம்புத்தூர் ஸ்டைலில் அசத்தலான ஒரு குட்டி குட்டி போண்டா ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முற்றிலும் வித்தியாசமான சுவையில் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யக்கூடிய இந்த போண்டாவின் சுவை அத்தனை அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிக மிக பிடிக்கும். பெரியவர்களும் விருப்பமாக சாப்பிடுவார்கள். சாயங்கால நேரத்தில் இந்த போண்டாவை டீ காபியுடன் பரிமாறினால் அட்டகாசமான ஸ்நாக்ஸாக இருக்கும்.

முதலில் 1 டம்ளர் அளவு இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாகப் புளித்த இட்லி மாவாக இருந்தால் அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போதுதான் இட்லி மாவை ஆட்டி வைத்துள்ளீர்கள் என்றால் அந்த மாவை 8 மணி நேரம் நன்றாக புளிக்க வைத்து கொள்ளுங்கள். (மாவு நன்றாக கட்டி பதத்தில் இருக்க வேண்டும்.)

- Advertisement -

ஒரு டேபிள்ஸ்பூன் கடலை பருப்பை தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக மிக்ஸி ஜாரில் மிளகு – 15, வர மிளகாய் 3, இஞ்சி ஒரு சிறிய துண்டு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மைய அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

புளித்த மாவில், ஊற வைத்த கடலைப்பருப்பு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுது, 1/2 ஸ்பூன் சோடா உப்பு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இந்த பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக கலந்து விடுங்கள்.

அடுத்தபடியாக ஒரு தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, 1/2 ஸ்பூன் கடுகு போட்டு, தாளித்து அந்த தாளிப்பையும் மாவுடன் கொட்டி விடுங்கள். 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் மாவை நன்றாக கலந்து விட்டு கொள்ள வேண்டும். இப்போது நமக்கு போண்டா செய்வதற்கு மாவு தயாராக உள்ளது.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு செய்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய ஸ்பூனில் இந்த மாவை எடுத்து அப்படியே போண்டா போல எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பரான மசாலா வாசத்துடன் குட்டி குட்டி போண்டா தயார். இந்த ரெசிபி உங்களுக்குப் பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -