சகல சௌபாக்கியம் தரும் மகாலட்சுமி பூஜை

lakshmi poojai
- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்று நினைத்து பல பரிகாரங்களையும், வழிபாடுகளையும், பூஜை முறைகளையும் நாம் செய்து வருகிறோம். காரணம் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் செல்வ வளத்தில் நாம் மேலோங்கி இருப்போம் என்பதுதான். ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ வளம் நிறைவாக இருந்தால் அவருடைய வாழ்க்கையில் எந்தவித குறையும் இருக்காது. எந்தவித குறையும் இல்லாமல் நலமுடனும் சிறப்பாகவும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் பூஜை செய்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமி தாயாரை நாம் வழிபடும் பொழுது நமக்கு பணவரவு ஏற்படும். பணவரவு அதிகரிக்கும்பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய கடன் பிரச்சினைகளும் தீரும். இதோடு மட்டுமல்லாமல் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் மன நிம்மதி என்பது இல்லை என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அவ்வளவுதானா என்று கேட்டால் இன்னும் ஒரு முக்கியமான ஒன்று இருக்கிறது இந்த நொடி வரை நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கும் வல்லமை மகாலட்சுமி தாயார் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்குரிய எளிமையான பூஜை முறையை பார்ப்போம்.

இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் செய்ய வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செய்யலாம் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்யலாம். எப்பொழுதும் வியாழக்கிழமை அன்றே வீட்டையும், பூஜை ரூமையும், பூஜை பொருட்களையும் சுத்தம் செய்து வெள்ளிக்கிழமை பூஜைக்காக தயார் செய்து வைத்திருப்போம். வெள்ளிக்கிழமை அன்று காலையில் ஒரு மனைப் பலகையை எடுத்து அதை சுத்தம் செய்து அதில் மா கோலம் போட்டு அதற்கு மேல் மகாலட்சுமி தாயாரின் படத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த படத்திற்கு முன்பாக ஒரு கலச சொம்பை வைத்து அதில் முக்கால் பங்கு வரும் வரை தண்ணீர் ஊற்றி, கஸ்தூரி மஞ்சள் தூள், பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு இவற்றை சேர்க்க வேண்டும். அடுத்ததாக இதற்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் வெற்றிலைகளை வைத்து வெற்றிலைக்கும் மேல் ஒரு தேங்காயை வைக்க வேண்டும். வெற்றிலை கிடைக்காத பட்சத்தில் மாயிலையை வைத்துக் கொள்ளலாம்.

இந்த மனை பலகைக்கு கீழே தாமரைப் பூக்கோலம் போட்டு அதற்கு மேல் ஒரு வாழை இலையை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான நெய்வேத்தியமாக டைமண்ட் கற்கண்டை வைக்க வேண்டும். இயன்றவர்கள் கற்கண்டு சாதம் செய்து வைக்கலாம். கலசத்திற்கு வாசனை நிறைந்த மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். இந்த பூஜைக்கு தாமரை பூ வேண்டும். கிடைக்காதவர்கள் மல்லிகைப் பூவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மல்லிகை பூவும் கிடைக்கவில்லை என்பவர்கள் ரோஜா பூக்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

தாமரை இதழ்களை உதிர்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். தாழம்பூ குங்குமத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 108 ஒரு ரூபாய் நாணயங்களை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளை கூற வேண்டும். அப்பொழுது ஒரு தாமரை இதழ் சிறிது தாழம்பூ குங்குமம் ஒரு ஒரு ரூபாய் நாணயம் என்று எடுத்து ஒரு போற்றியை சொல்லி கலசத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். கலசத்தை தொட்டு வாழை இலையில் வைத்து வைத்துவிட வேண்டும்.

இந்த முறையில் 108 போற்றிகளை கூறி வழிபாடு செய்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து 48 நாட்கள் பூஜை செய்துவர மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக நமக்கு கிடைத்து பணவரவு அதிகரிக்கும். இதனால் கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி ஏற்படும். இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பை பெற வெள்ளிக்கிழமை பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த மகாலட்சுமி தாயாரின் பூஜையை நாமும் நம் இல்லத்தில் செய்து மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

- Advertisement -