இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரை பொடி

drumstick leaf
- Advertisement -

கீரைகள் என்றாலே அதில் சத்துக்கள் அதிகமாக தான் இருக்கும். அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரையை சொல்லவே வேண்டாம். பல உயிர் சத்துக்களை கொண்ட இந்த முருங்கைக் கீரையை நாம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் நலம் சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றைய சூழலில் குழந்தைகள் கீரைகளை விரும்பி சாப்பிடுவது இல்லை. அப்படிப்பட்டவர்களுக்காக செய்யக்கூடிய ஒரு முருங்கைக்கீரை பொடியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முருங்கைக் கீரையில் விட்டமின் ஏ, பி, சி, இ போன்ற உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. முருங்கைக் கீரையை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது மூளையின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. மனவளம், ஞாபக சக்தி போன்றவற்றையும் பாதுகாக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை வலுப்பெற உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்கீரை – ஒரு கட்டு
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • வேர்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • மல்லி – 2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 10
  • கருப்பு எள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
  • புளி – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கீரையை காம்புகளை நீக்கி சுத்தமாக ஆய்ந்து கொள்ள வேண்டும். பிறகு அதை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி தண்ணீரில் இருந்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணியை கீழே விரித்து அதற்கு மேல் இந்த முருங்கை இலையை பரப்பி நன்றாக தண்ணீர் இல்லாமல் உலர வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ள வேண்டும்.

கடாய் சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து வறுக்க வேண்டும். இவை அனைத்தும் லேசாக சிவந்த பிறகு சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய், கருப்பு எள் போன்றவற்றையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அனைத்தும் நன்றாக சிவந்த பிறகு அதில் பெருங்காயத்தையும், புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். வருத்த இந்த பொருட்களை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

மறுபடியும் அந்த கடாயை அடுப்பில் வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் உலர வைத்திருக்கும் முருங்கைக் கீரையை சேர்க்க வேண்டும். முருங்கைக் கீரை நன்றாக தண்ணீர் இல்லாமல் சுருள ஆரம்பித்து பாதி அளவு வந்துவிடும். பாதி அளவுக்கு வந்துவிடும் அந்த நேரத்தில் அதையும் தனியாக எடுத்து தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.

இவை இரண்டும் நன்றாக ஆறியபிறகு மிக்ஸி ஜாரில் நாம் வறுத்து வைத்திருக்கும் பருப்பு வகைகளை சேர்த்து கொரகொரவென்று அறைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அதோடு முருங்கைக்கீரையும் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இட்லி பொடி பதத்திற்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொடியை இட்லி தோசைக்கு இட்லி பொடியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். சாப்பாட்டில் நல்லெண்ணையை ஊற்றி இந்த பொடியை கலந்து முருங்கைக்கீரை சாதமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரிங் முறுக்கு

முருங்கைக் கீரையை அடிக்கடி நாம் சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண் நோய், கபம், மந்தம் போன்றவை அனைத்தும் குணமாகும். மேலும் உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது முருங்கைக் கீரையை சாப்பிட்டு வர வேண்டும்.

- Advertisement -