முப்பெரும் தேவியரின் அருளைப் பெற பஞ்சமி வழிபாடு

panjami valipadu
- Advertisement -

இந்த உலகத்தை படைத்து, காத்து, அழிக்கும் சக்திகளை கொண்டவர்கள்தான் முப்பெரும் தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களுக்கு உறுதுணையாக திகழக் கூடியவர்கள் தான் சரஸ்வதி, மகாலட்சுமி, பார்வதி இவர்கள் மூவரும் முப்பெரும் தேவிகள் என்று கூறுவோம், இந்த முப்பெரும் தேவிகளின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால் செல்வ செழிப்பிற்கும், கல்வி அறிவிற்கும், வீர தைரியத்திற்கும் எந்தவித குறையும் இருக்காது. இவை அனைத்தும் ஒரு சேர பெற்றவர் வாழ்க்கையில் கண்டிப்பாக கொடுத்து வைத்தவராக தான் திகழ்வார்கள். அப்படி கொடுத்து வைத்தவர் ஆக திகழ்வதற்கு முப்பெரும் தேவியரின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய பஞ்சமி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக பஞ்சமி என்பது அமாவாசை முடிந்து ஐந்தாவது நாள் வரும். அதே போல் பௌர்ணமி முடிந்தும் ஐந்தாவது நாள் வரும். இந்த பஞ்சமி திதி என்று நாம் கேட்டவுடன் நம் நினைவிற்கு வருபவள் வாராகி தாயார் தான். பஞ்சமி திதி அன்று வாராகி தாயாரை வழிபடும் பக்தர்கள் இந்த காலத்தில் அதிகமான பேர் இருக்கிறார்கள். வாராஹி தாயாரை வழிபடும் வழிமுறைகள் பல இருக்கின்றன. ஆனால் அதே பஞ்சமி திதி அன்று முப்பெரும் தேவிகளையும் ஒருசேர வழிபடக்கூடிய ஒரு அற்புதமான வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் தொடர்ந்து பஞ்சமி திதி வரும்போது எல்லாம் செய்து கொண்டே வந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் முப்பெரும் தேவியரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். பஞ்சமி திதி அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறைக்கு வந்து பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிறிய மனப்பலகை ஒன்றை எடுத்து வைத்து அதையும் சுத்தம் செய்து மஞ்சளை முழுமையாக தேய்த்து அதில் மாக்கோலம் போட்டு அந்தக் கோலத்திற்கு மேல் ஒரு குத்து விளக்கை வைக்க வேண்டும்.

அந்த குத்துவிளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது பசு நெய்யை ஊற்றி ஐந்து முகங்களுக்கும் பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். குத்துவிளக்கிற்கு மலர்களால் அலங்காரம் செய்து விட்டு கற்கண்டு, உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரிச்சம்பழம் என்று இவற்றில் ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைக்கலாம். இயன்றவர்கள் இனிப்பு பொருட்கள் ஏதாவது ஒன்றை செய்து நெய்வேத்தியமாக வைக்கலாம். அதிலும் குறிப்பாக முந்திரி, திராட்சை, இனிப்பு, பாசிப்பருப்பு, பச்சரிசி, நெய், ஏலக்காய் என்று தெய்வீகத் தன்மை உடைய பொருட்கள் அனைத்தும் ஒரு சேர கலந்திருப்பதாலும் சர்க்கரைப் பொங்கல் என்பது மிகவும் விசேஷமான நெய்வேத்தியமாக திகழ்கிறது.

- Advertisement -

பிறகு நாம் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த குத்துவிளக்கில் கிழக்கு நோக்கி எறியக்கூடிய தீபத்தை பார்த்து கீழ்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரிக்கும் பொழுது மலர்களால் குத்து விளக்கிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

மந்திரம்

- Advertisement -

“ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ”

வழிபாட்டை நிறைவு செய்த பிறகு சாம்பிராணி தூபம் காட்டிவிட்டு கற்பூரம் ஏற்றி ஆராத்தி எடுக்க வேண்டும். பிறகு நம்முடைய வாழ்க்கைக்கு தேவையானவற்றை அந்த தீபச்சுடர் ஒளியை பார்த்து மனதார வேண்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பொன் பொருள் சேர பௌர்ணமி வழிபாடு

இவ்வாறு தொடர்ந்து பஞ்சமி திதிகளில் நாம் வழிபாடு செய்ய நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதோடு மட்டுமல்லாமல் முப்பெரும் தேவியரின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -