உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று பலவகையான காய்கறிகளை சேர்த்து சமைப்பது வழக்கமாக இருக்கிறது. பலரும் பல காய்கறிகளை சேர்த்து குழம்பு வைத்து அதை வெண்பொங்கலுக்கு உபயோகப்படுத்திக் கொள்வார்கள். இன்னும் சிலரோ அவியலாக செய்து சாப்பிடுவார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பல காய்களை பயன்படுத்தி அவியல் எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்ப்போம்.
பொதுவாக அவியல் என்றாலே அதில் பல காய்களை நாம் உபயோகப்படுத்துவோம். இப்படி பல காய்களை உபயோகப்படுத்தி அவியல் செய்வதன் மூலம் அனைத்து காய்களின் சத்துகளையும் நம்மால் பெற முடியும். அதிலும் குறிப்பாக பொங்கல் தினத்தன்று நாட்டு காய்களை பயன்படுத்தி அவியல் செய்யும் முறையை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- அவரைக்காய் – 10
- புடலங்காய் – பாதி அளவு
- கத்திரிக்காய் – 2
- மஞ்சள் பூசணி – ஒரு கீற்று
- வெள்ளை பூசணி – ஒரு கீற்று
- சக்கர வள்ளி கிழங்கு – ஒன்று
- கொத்தவரங்காய் – 10
- வாழைக்காய் – பாதி
- மொச்சைக்காய் – 50
- பச்சை மிளகாய் – 2
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- கடுகு – 1/4 ஸ்பூன்
- உளுந்து – 1 ஸ்பூன்
- பெருங்காயம் தூள் – 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி அளவு
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அனைத்து காய்கறிகளையும் கழுவி பிறகு அதை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரே அளவாக நறுக்கி வைப்பதன் மூலம் அனைத்தும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டுக் கொள்ளலாம். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அனைத்து காய்கறிகளையும் சேர்க்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிட்டு காய்கள் வேகம் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
காய்கறிகள் அனைத்தும் நன்றாக வெந்த பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்பொழுது தாலிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து கடுகு நன்றாக வெடித்ததும் வேக வைத்திருக்கும் காய்கறிகளில் இதை ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான அவியல் தயாராகிவிட்டது. இவ்வாறு அவியல் செய்யும்பொழுது தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்தினால் அதன் வாசனை மிகவும் நன்றாக இருக்கும். மேல் சொன்ன காய்கறிகளை மட்டும் தான் போட வேண்டும் என்று இல்லை நமக்கு கிடைக்க கூடிய அனைத்து விதமான நாட்டு காய்களையும் இந்த அவியலுக்கு பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: முருங்கைக் கீரை துவையல் செய்முறை
மிகவும் எளிமையான முறையில் அனைத்து விதமான நாட்டு காய்கறிகளையும் பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு அவியலை செய்து பாருங்கள். ருசி மிகவும் அருமையாக இருக்கும்.