பூண்டு கார சட்னி செய்முறை

garlic chilli chutney
- Advertisement -

நம்முடைய இன்றைய காலத்து உணவு பழக்க வழக்கத்தில் காலையிலும் இரவிலும் டிபன் வகைகளை சாப்பிடும் பழக்கத்தை வைத்திருக்கிறோம். இப்படி நாம் டிபன் செய்யும் பொழுது என்ன டிபன் செய்யலாம் என்று யோசிப்பதைப் போலவே அதற்கு தொட்டுக்கொள்ள என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கி விட்டது. ஒரு சிலர் மட்டுமே சாதத்திற்கு தயார் செய்த குழம்பை ஊற்றி சாப்பிடுவார்கள். பலரும் தங்களுக்கு தொட்டுக் கொள்ள சட்னி வேண்டும் என்று கேட்பார்கள். அதிலும் குறிப்பாக தங்களுக்கு பிடித்தமான சட்னி வேண்டும் என்று கேட்பார்கள். ஒரு சிலருக்கு தேங்காய் சட்னி ஒரு சிலருக்கு கார சட்னி என்று சட்னிகளின் வகைகள் சென்று கொண்டே இருக்கும்.

இவை அனைத்தும் சாதாரணமாக நாம் செய்யக்கூடிய சட்னிகள் தான். இப்படி செய்வதை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான பூண்டை வந்து சட்னி செய்தால் குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் இந்த சட்னியை செய்த நாளில் மட்டும் இட்லியோ, தோசையோ ஒன்று இரண்டு அதிகமாகவே உள்ளே செல்லும். அந்த அளவிற்கு சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த அற்புத சுவை மிகுந்த பூண்டு கார சட்னியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பூண்டு – 25 பல்
  • சின்ன வெங்காயம் – 15
  • காய்ந்த மிளகாய் – 8
  • புளி – கோலிக்குண்டு அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுந்து – 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – 1 இனுக்கு
  • நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பூண்டையும் சின்ன வெங்காயத்தையும் உரித்து தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வரமிளகாயை போட்டு லேசாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

மிளகாயை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே எண்ணெயில் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு லேசாக வதங்கியதும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு புளி, உப்பு இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்பொழுது முதலில் மிக்ஸி ஜாரில் நாம் வறுத்து வைத்த காய்ந்த மிளகாயை பொடியாக அரித்துக்கொள்ளுங்கள். பிறகு இதனுடன் நாம் வதக்கி வைத்திருக்கும் பூண்டு சின்ன வெங்காயத்தையும் சேர்த்து தண்ணீர் குறைவாக ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக அரைத்த பிறகு அடுப்பில் கடாயை வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட வேண்டும்.

கடுகு பொரிந்து உளுந்து சிவந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை அந்த கடாயில் ஊற்றி சிறிதளவு தண்ணீரை மிக்ஸி ஜாரில் ஊற்றி கழுவி அதில் ஊற்றி விட வேண்டும். இரண்டு நிமிடம் மட்டும் அடுப்பில் குறைந்த தீயில் அப்படியே இருக்கட்டும். இதை இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டு போகாது. இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், சாம்பார் சாதம் ஏன் வெறும் சாதத்தில் கூட போட்டு பிரட்டி சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: நார்த்தங்காய் பச்சடி செய்முறை

எப்பொழுதும் போல் ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்காமல் இந்த மாதிரி ஒரு முறையாவது முயற்சி செய்து பாருங்கள். அப்புறம் உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாருக்கும் இதுதான் ஃபேவரட்டான சட்னியா மாறிடும்.

- Advertisement -