ஜாதிக்காயை இப்படி வைத்து பரிகாரம் செய்து பாருங்கள். குரு பகவான் அருளோடு, மகாலட்சுமியின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைத்து பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்திலும் இருந்து வெளியில் வரலாம்.

jathikai lakshmi guru
- Advertisement -

பணம் என்ற உயிர் இல்லா பொருளே உயிருள்ள நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. பணத்தை நோக்கியே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பணத்தை எப்படி சம்பாதிப்பது? எப்படி சேர்த்து வைப்பது? எப்படி செலவு பண்ணுவது? என்பது மட்டுமே தங்கள் வாழ்க்கையில் குறிக்கோளாக கருதி அதை நோக்கியே சென்று கொண்டே இருக்கிறார்கள் அவ்வாறு சென்றாலும் சில நேரங்களில் அந்த பணம் நம்மிடம் இல்லாமல் பொருளாதார ரீதியாக நாம் மிகவும் தாழ்வடைய நீடிக்கும் மீண்டும் நாம் முன்னேறுவதற்கு முயற்சிகளை எடுக்கும் பொழுது ஏதாவது தடங்கள் ஏற்பட்டு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவோம் அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜாதிக்காயை வைத்து எப்படி பரிகாரம் செய்தால் நம்முடைய பொருளாதாரத்தில் நாம் மேன்மை அடைய முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

குரு பார்க்க கோடி நன்மை, குரு கொடுக்க யார் தடுப்பார் என்று குரு பகவானிற்கென்றே சில பொன்மொழிகள் இருக்கின்றன. ஆம் குரு பகவான் நினைத்தால் அவர் நமக்கு அளவற்ற செல்வங்களை தருவார். அப்படிப்பட்ட குரு பகவானின் அருள் மட்டும் நமக்கு கிடைத்துவிட்டால் போதாது. அந்த செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் நம்முடைய பணத்தை நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள முடியும். மேலும் வாழ்க்கையில் முன்னேற முடியும். முன்னேற துடிக்கும் ஒவ்வொரு நபரும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதை அவர்களால் உணர முடியும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த கிழமையான வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது குருவின் அம்சமான மஞ்சள் நிற துணி. பொதுவாக இவ்வாறு நாம் பரிகாரம் செய்யும் பொழுது வெள்ளை நிற துணியில் மஞ்சளை தடவி காய வைத்து உபயோகப்படுத்தினால் அதற்குரிய பலன் மிகவும் சிறப்பாக இருக்கும். பிறகு இதற்காக நமக்கு தேவைப்படுவது மூன்று ஜாதிக்காய், சிறிய அளவிலான தங்கம், பச்சைக் கற்பூரம், வாசனை மிகுந்த மல்லிகைப்பூ மூன்று.

வெள்ளிக்கிழமை அன்று காலையில் நம் வீட்டில் பூஜை செய்யும் பொழுது மகாலட்சுமியின் புகைப்படத்திற்கு முன்பாக இந்த மஞ்சள் நிற துணியை விரித்து அதில் மூன்று ஜாதிக்காயை வைக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு தங்கத்தை வைக்க வேண்டும். தங்கம் நாம் ஏற்கனவே உபயோகப்படுத்தியதாக இருந்தால், அதை உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்த பிறகு வைக்க வேண்டும். பயன்படுத்திய நகையை அப்படியே வைக்க கூடாது. அத்துடன் மூன்று மல்லிகை பூவையும் வைக்க வேண்டும். சிறிது பச்சை கற்பூரத்தை அதனுடன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இதற்கு நாம் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். பிறகு இதை பேப்பரை மடிப்பது போல் மடித்து வைக்க வேண்டும். மூட்டையாக கட்டக் கூடாது. மடித்த இந்த மஞ்சள் நிற துணியை தொழில் ஸ்தாபனங்களில் இருக்கக்கூடிய பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். வீடாக இருந்தால் வீட்டில் நாம் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். பீரோவில் வைக்கலாம். நகை வைக்கும் இடத்தில் வைக்கலாம். இவை எதுவும் இல்லை என்றால் நம்முடைய வீட்டு பூஜை அறையில் இதை வைக்கலாம்.

இதில் இருக்கும் மல்லிகை பூவை மட்டும் வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று மாற்றி புதிதாக வைக்க வேண்டும். மல்லிகை பூ கிடைக்காத பட்சத்தில் மல்லிகை பூவிற்கு பதிலாக நாம் மரிக்கொழுந்தை உபயோகப்படுத்தலாம். ஆனால் மல்லிகை பூவிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். வேறு எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு நாம் வைப்பதன் மூலம் பண ஈர்ப்பு ஏற்பட்டு, பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் நிகழும். முன்னேற எடுத்து வைக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் நாம் செய்யும் இந்த ஒரு சிறு மாற்றத்தால் கிரகங்களினால் ஏற்படும் பெருந் துன்பத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் தெரியும்மா?

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை நாம் தொடர்ந்து செய்து வந்தால் குருவின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதே சமயம் மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு கிடைக்கும். இவர்கள் இருவரின் அருள் நமக்கு கிடைத்தால் நம் வாழ்வில் நமக்கு எந்த குறையும் இருக்காது.

- Advertisement -