புரட்டாசியில் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களும் அதன் அற்புத பலன்களும்! நினைத்ததை அடைய பெருமாள் வழிபாடும், சுலபமான மந்திரங்களும்!

perumal-thulasi-vilakku
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வீக வழிபாட்டிற்கு உரிய மாதமாகவே தமிழ் மாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்த புரட்டாசி மாதம் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த மாதம் ஆகும். பெருமாள் வழிபாடு செய்வதற்கும், அவருடைய அருளைப் பெறுவதற்கும் உரிய இந்த மாதத்தில் நீங்கள் என்ன விஷயங்களை செய்தால்? என்ன பலன்களை பெறலாம்? பெருமாள் அருள் பெற செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன? என்கிற சூட்சம குறிப்புகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

perumal

புரட்டாசி மாதத்தில் விஷ்ணு வழிபாடு செய்ய நாம் தொடங்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. இம்மாதம் முழுவதும் அனுதினமும் விஷ்ணுவை நினைந்து ‘ஓம் நாராயணாய’ என்னும் இந்த எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்தால் மோட்சம் கிடைப்பது உறுதி. அசைவத்தை தவிர்த்து சைவத்தை தொடர்ந்து இறை சிந்தனையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு கேட்ட வரம் கேட்ட படியே கிடைக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

புரட்டாசி மாதத்தில் வெற்றியடைய அவருடைய கதைகளை காதால் கேட்பதும், வாயால் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் சிறந்த பலனை கொடுக்கும். கணவனுடைய ஆயுள் அதிகரிக்க மனைவியும், மனைவியுடைய ஆயுள் அதிகரிக்க கணவனும், புரட்டாசி மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து புனித நதிகளில் நீராட ஏராளமான நன்மைகள் உண்டாகும். அப்படி நதிகளில் நீராட முடியாதவர்கள் வீட்டிலேயே குளிக்கும் தண்ணீரில் கங்கை நீரை சிறிதளவு சேர்த்து குளிக்கலாம் அல்லது நீரில் மஞ்சள், வேப்பிலை, பச்சை கற்பூரம் போன்றவற்றை சேர்த்து கங்கையாக பாவித்தும் குளிக்கலாம். குளித்து முடித்ததும் விஷ்ணு காயத்ரி மந்திரம் உச்சரிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு எவ்வித சண்டை, சச்சரவுகளும் இல்லாமல் தம்பதிகள் அன்யோன்யமாக நீண்ட ஆயுள் பெற்று வாழலாம்.

perumal

விஷ்ணு காயத்ரி மந்திரம்:
ஓம் நாராயணாய வித்மஹே!!
வாசுதேவாய தீமஹி!!
தன்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்!!!

- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்க பொருளாதார பிரச்சனைகள் தீர, செல்வ செழிப்பும் உண்டாக புரட்டாசி மாதத்தில் துளசி வழிபாடு செய்ய வேண்டும். துளசி மாடம் வைத்திருப்பவர்கள் அதற்கு புரட்டாசி மாத மாலை வேளைகளில் நெய் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து கீழ்வரும் இந்த மந்திரத்தை 11 முறை அல்லது 27 முறை உச்சரித்துக் கொண்டே வலம் வர வேண்டும். இவ்வாறு செய்ய எல்லா துன்பங்களும் நீங்கி செல்வம் பெருகும்.

Perumal

மந்திரம்:
ஓம் வாசுதேவய நம:

- Advertisement -

எவ்வித தோஷங்களும், செய்த பாவங்களும் நீங்கி நன்மைகளைப் பெற சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு இனிப்புப் பலகாரத்தை பிரசாதமாக வழங்கலாம். நீங்கள் கொடுக்கும் இனிப்பு பலகாரம் வெள்ளை நிறத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் புரட்டாசியில் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குவது, பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து கொடுப்பது போன்றவற்றை செய்யும் பொழுது எத்தகைய பாவங்களும் உங்களை விட்டு நீங்கும்.

thulasi

எந்த பிரசாதங்களிலும் துளசியை சேர்த்து கொடுப்பது அவசியம் கடைபிடிக்க வேண்டும். புரட்டாசியில் நீங்கள் துளசிக்கு கொடுக்கும் மகத்துவம் பெருமாளின் அருளைப் பெற்றுக் கொடுக்கும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள், எல்லா நன்மைகளும் உண்டாகும். மனதிலிருக்கும் சஞ்சலங்கள் தீர்ந்து, இறை சிந்தனை அதிகரிக்க, இறை அருள் பெற, மஞ்சள் நிற பழங்கள், மஞ்சள் நிற தானியங்கள், மஞ்சள் வஸ்திரம் ஆகியவற்றை பெருமாள் பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்து மற்றவர்களுக்கு அவற்றை தானம் செய்யுங்கள். மஞ்சள் மங்களம் தரும் பொருள் என்பதால் எல்லா வகையான மங்களமும் உண்டாகும்.

annathanam

வருமான குறை, தொழில் நஷ்டம், வேலை இல்லாமல் இருப்பவர்கள், இருக்கும் அத்தனை தடைகளையும் தாண்டி வெற்றி பெற புரட்டாசி மாதத்தில் ஏழு மலைகளின் சாட்சியாக, ஏழு என்கிற எண்ணிக்கையில் சிறுவர்-சிறுமியர்களை வீட்டிற்கு அழைத்து வடை, பாயாசத்துடன் வயிறார உணவு பரிமாறுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். மேலும் வருமானம் அதிகரிக்கும். பெருமாள் பக்தர்களுக்கு மனதில் வஞ்சகம், பேராசை, அவநம்பிக்கை, தீய எண்ணங்கள், கெட்ட வார்த்தைகள், கோபம், குரோதம் போன்ற எந்த எதிர்மறை விஷயங்களும் இருக்கக் கூடாது. இவற்றை விட்டொழிந்து முழுமையாக பெருமாளை சரணடைந்தால் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம். எனவே இந்த மாதத்தை உங்கள் உள்ளத்தை தூய்மை செய்து, இனிவரும் காலங்களில் வசந்தமாக்க பயன்படுத்திக் கொள்ளலாமே!

- Advertisement -