பாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் – சுவாரஸ்ய சம்பவம்

krishnar
- Advertisement -

மகா பாரதப்போர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக பாண்டவர்களின் தூதுவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்ற கதையை நாம் படித்திருப்போம். அப்படி தூது செல்வதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களில் ஒருவரான சகதேவனிடம், நான் அமைதியை நிலைநாட்ட விரும்புவதால் நாளை அஸ்தினாபுரம் சென்று கௌரவர்களிடம் இது குறித்து பேச போகிறேன். நீ தான் சாத்திரங்களிலும் ஜாதகம் கணிப்பதிலும் வல்லவனாயிற்றே போரை நிறுத்த ஏதாவது உபாயம் உண்டென்றால் கூறு அதையும் முயற்சிக்கிறேன் என்றார் கிருஷ்ணர்.

krishnaசகாதேவன் தன்னுடைய ஆருட சாஸ்திர அறிவால் கிருஷ்ணர் போரை மூட்டி விடவே அஸ்தினாபுரம் செல்கிறார் என்பதை நன்கு அறிந்திருந்தான். அதனால் வேடிக்கையாக போரை நிறுத்தும் ஒரு உபாயத்தை கிருஷ்ணரிடம் கூற தொடங்கினான். அர்ஜுனனின் காண்டீபத்தை முறித்தெறிந்து , பீமனின் சக்தி வாய்ந்த கதாயுதத்தை உடைத்தெறிந்து, பாஞ்சாலியின் விரிந்த கூந்தலை அறுத்தெறிந்து, தீயவர்களிடம் நல்லவனானாக இருக்கும் கர்ணனுக்கு முடிசூட்டலாம். அதோடு இவை அனைத்திற்கும் மேலாக அஸ்தினாபுரத்திற்கு தூது செல்ல தயாராக இருக்கும் உன்னை நான் கட்டி போட்டால் நிச்சயம் போர் மூளாது. இவை அனைத்தையும் செய்ய முடியுமா என்றான் சகாதேவன்.

சகதேவனின் பேச்சை கேட்டு கிருஷ்ணர் சிரிக்க ஆரமித்தார். என்னை எப்படி உன்னால் கட்டிப்போட முடியும் என்றார். ஏன் முடியாது உன்னை என்னால் நிச்சயம் கட்ட முடியும் என்றான் சகாதேவன். உடனே கிருஷ்ணர் பல்லாயிரம் கிருஷ்ணராக வடிவெடுத்தார். எங்கு பார்த்தாலும் கிருஷ்ணராகவே இருந்தார். இத்தனை கிருஷ்ணரை எப்படி கட்டுவது என்று சகாதேவன் துவண்டு போகவில்லை.

- Advertisement -

krishnaஇதற்கான உபாயம் ஒன்றை யோசித்தான். உடனே அவன் தியான நிலையில் அமர்ந்து கிருஷ்ணரை நினைத்து கீழே உள்ள மந்திரத்தை ஜபிக்க ஆரமித்தான்.

மந்திரம்:
‘ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’

krishnaஒருகட்டத்தில் அவன் பக்தியில் மூழ்கிப்போனான். அதன் பின் அவன் மந்திரத்தை ஒவ்வொரு முறை ஜெபிக்கும்போதும் ஒவ்வொரு கிருஷ்ணரின் ரூபமும் மறைந்து மற்ற ரூபத்தோடு இணைத்தது. இறுதியாக அனைத்து ரூபங்களும் இணைந்து ஒரே கண்ணனாக மாறினார். அவரும் சகதேவனின் இதயத்தில் கட்டுண்டார்.

இதையும் படிக்கலாமே:
சர்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது ? அதற்கான பரிகாரம் என்ன ?

- Advertisement -

போதும் சகாதேவா நீ வென்றுவிட்டாய். பக்தியால் இறைவனை கட்ட முடியும் என்று நீ நிரூபித்து காட்டிவிட்டாய். என் கட்டை அவிழ்த்துவிடு நான் செல்லவேண்டும் என்றார் கிருஷ்ணர். சகாதேவனும் தியானத்தை களைத்து கண்ணனை விடுவித்தான்.

தமிழ் கதைகள், சிறு கதைகள், குட்டி கதைகள் என சுவாரஸ்யமான கதைகள் அனைத்தையும் உடனுக்குடன் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

- Advertisement -