நாம் பெற்ற செல்வங்கள் அனைத்தும் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டது தான். அப்படி இறைவனை வேண்டி வணங்கி பெற்ற செல்வத்தை நாம் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கனகதாரா ஸ்தோத்திரம் உருவான கதையை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆதிசங்கரர் அருளியது தான் கனகதாரா ஸ்தோத்திரம். இவர் ஒரு சன்னியாசி. சன்னியாசம் மேற்கொள்பவர்கள் தினமும் பிச்சை எடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி ஒரு நாள் ஆதிசங்கரர் ஒரு ஏழைப் பிராமணன் வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டுள்ளார். அந்த சமயத்தில் பிராமணனின் மனைவி மட்டும் தான் அந்த வீட்டில் இருந்தாள். பிச்சை கேட்டு வந்த சன்யாசிக்கு கொடுப்பதற்கு அவள் வீட்டில் எதுவுமே இல்லை. ஆனால் “எதுவும் இல்லை” என்று கூற அவளுக்கு மனம் வரவில்லை. தன் வீட்டிற்குப் பிச்சை கேட்டு வந்த அந்த அடியவரை, சிவனே நேரடியாக தன் வீட்டில் வந்து பிச்சை கேட்பதாக நினைத்துக் கொண்டாள். தன் வீட்டிற்குள் சென்று பிச்சையிட ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்த போது காய்ந்த நெல்லிக்கனிகள் தான் இருந்தது. வீட்டிற்கு வந்த அடியவரை வெறும் கையோடு திருப்பி அனுப்பக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த காய்ந்த நெல்லிக்கனிகளை ஆதிசங்கரருக்கு பிச்சையாக அளித்தாள்.
பிச்சை கொடுக்க கூட தகுதி இல்லாதது தான் அந்த நெல்லிக்கனி. ஆனால் நம் வீட்டிற்கு பிச்சை கேட்டு வந்த அடியவருக்கு நம்மால் நல்லதாக எதுவும் கொடுக்க முடியவில்லையே, என்று அந்த ஏழை பிராமண மனைவி அடைந்த வேதனையையும், துடிப்பையும் ஆதிசங்கரரால் உணர முடிந்தது.
இப்படிப்பட்ட வறுமையிலும் தானம் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் தோன்றியதால், அந்த ஏழை பிராமண பெண்ணுக்கு வறுமை நீங்கி அனைத்து சந்தோஷங்களும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, ஆதிசங்கரர் அந்த மஹாலக்ஷ்மியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடி வேண்டியுள்ளார். ஆதிசங்கரரின் வேண்டுதலை ஏற்ற மஹாலக்ஷ்மி அவருக்கு தரிசனம் தந்தார். மஹாலக்ஷ்மி தாயிடம் ஆதிசங்கரர் கேட்டது இதுதான். “எனக்கு நெல்லிக்கனியை பிச்சையாக கொடுத்த ஏழை பெண்ணின் வறுமையை நீக்க வேண்டும்.” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார்.
ஆதிசங்கரருக்கு மகாலட்சுமி கூறிய பதில் இது தான். “ஆதிசங்கரரே! இவர்கள் வறுமையில் பிடியில் சிக்கித் தவிக்க வேண்டும் என்பது இவர்களின் பூர்வ ஜென்ம பாவம். பூர்வ ஜென்மத்தில் இந்தப் பெண்மணி குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். இவளின் கணவன் குசேலன், கண்ணனின் அருளைப் பெற்று அளவற்ற செல்வங்களைப் பெற்றான். ஆனால் அந்த செல்வங்களை இவர்கள் முறையாக பயன்படுத்தவில்லை. கண்ணனிடம் இருந்து பெற்ற செல்வத்திலிருந்து சிறிதளவு கூட தான தர்ம காரியங்களுக்காக செலவு செய்யவில்லை. அந்த செல்வங்களை வீணாக தான் செலவு செய்தனர். செல்வத்தின் அருமை பெருமை என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை. இதனால் அதற்கான தண்டனையை இவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.” என்று கூறினார்கள்.
ஆதிசங்கரர் மஹாலக்ஷ்மியை வேண்டி கேட்டது என்னவென்றால், “தேவி தாங்கள் கூறியதை நான் மறுக்கவில்லை. தாங்களின் கடைக்கண் பார்வை அந்த பெண்ணின் மேல் விழுந்து விட்டது. இனி அவளின் பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதாகத்தான் அர்த்தம். அவளை மன்னித்து வறுமையை தாங்கள் தான் நீக்க வேண்டும்.” என்று வேண்டி கேட்டுக் கொண்டார். ஆதிசங்கரரின் வேண்டுதல்களை ஏற்றுக்கொண்ட மகாலட்சுமி அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை வாரி வழங்கினாள்.
வறுமையில் உள்ளவர்கள் தங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை தோறும் ஆதிசங்கரர் கூறிய கனகதாரா ஸ்தோத்திரத்தை கூறி மகாலட்சுமியை வழிபட வேண்டும். இதனால் வறுமையின் நிலையில் இருந்து விடுபடலாம். கனகதாரா ஸ்தோத்திரத்தை நம்மால் கூற முடியவில்லை என்றாலும் பாடலாக நம் வீட்டில் ஒலிக்கச் செய்வது நல்லது.
கனகதார ஸ்தோத்திரம் படிக்க லிங்க் இதோ
இந்த கதையின் மூலம் நாம் உணர வேண்டியது என்ன? செல்வங்கள் அனைத்தும் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டது. இறைவனிடமிருந்து நாம் பெற்ற செல்வங்களை முறைப்படி செலவு செய்ய வேண்டும். வீணாக செலவழிப்பது என்பது நல்லது அல்ல. நம்மிடம் உள்ள செல்களில் சிறிதளவாவது தர்ம காரியங்களுக்கு செலவிடுவது நமக்கு அடுத்த ஜென்மத்திலும் நன்மை தரக்கூடியது.
இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Vellikizhamai seiya vendiyavai in Tamil.