பெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்

man-1
- Advertisement -

காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து வந்து கொண்டிருந்த விக்கரமாதித்யனிடம், அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது. இதோ அந்த கதை. ஒரு ஊரில் ராமநாதன் என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் அதிக செல்வம் ஈட்ட மிகவும் ஆசைக்கொண்டிருந்தான்.ஒரு முறை அந்த ஊருக்கு வந்த துறவி ஒருவர் ராமநாதனுக்கு விரைவிலேயே மிகுந்த செல்வம் கிடைக்கப்போவதாக சொல்லி சென்றார். இதைக்கேட்ட பின்பு எந்த ஒரு பணிக்கும் செல்லாமல் சும்மாவே இருந்தான் ராமநாதன்.

vikramathitan

அப்போது அவ்வூருக்கு வந்த தர்மன் என்பவன் ராமநாதனிடம் தான் கூறும் இடத்தில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்தால் ஆயிரம் பொற்காசுகள் தான் தருவதாக கூறினான். இதைக் கேட்டு மகிழ்ந்த ராமநாதன் அதைப்பற்றி விவரமாக கூறுமாறு தர்மனிடம் கூறினான். அவனிடம் தனது கதையை கூறத்தொடங்கினான் தர்மன். தர்மன் ஒரு பெண்ணை மணக்க விரும்பி, அவளின் தந்தை தன்னிடம் தானமாக கேட்ட ஆயிரம் பொற்காசுகளை தரமுடியாமல் தவித்த போது, அந்த ஊரில் ஜெயன் என்கிற செல்வந்தன் தன்னிடம் ஐந்து ஆண்டுகள் வேலை செய்தால் தான் ஆயிரம் பொற்காசுகளை தருவதாக கூறியதால் அவரிடம் வேலைக்கு சேர்ந்தான். ஆனால் சில காலத்திலேயே தர்மன் உடல்நலம் பாதிக்கப்பட தான் அப்பணியிலிருந்து விலகுவதாக கூறினான். அப்போது ஐந்து வருடம் வேலைசெய்வதாக அளித்த உறுதியிலிருந்து பின்வாங்குவது தவறு என ஜெயன் சுட்டிக்காட்டினான்.

- Advertisement -

அப்போது தர்மன், தான் கோவிலுக்கு சென்று வருவதாக ஜெயனிடம் கூறிவிட்டு கிளம்பி, துறவியாகும் எண்ணத்துடன் சென்ற போது அவன் வழியில் சந்தித்த துறவி ஒருவர் அவனுக்கு, புதையலைக் காணும் மந்திரத்தை சொல்லித்தந்து, அதை தர்மன் பயின்று வர அவனுக்கு புதையல் கிடைக்கும் என்றும், இந்த தவசக்தியை அவன் தவறாக பயன்படுத்தினால் அந்த சக்தி போய்விடும் என்று அந்த துறவி எச்சரித்தார். தனக்கென்று ஒரு மடம் அமைத்து அம்மந்திரத்தை தர்மன் தொடர்ந்து செய்து வரும் போது, ஒரு பெண் அவனிடம் அடைக்கலம் கேட்டு வந்தாள். தர்மனின் மடத்தில் அவனுக்கு பணிவிடை செய்த அந்த பெண்ணிற்கு தர்மன் அந்த புதையலை சில காலத்தில் தரப்போவதாக கூறினான். ஒரு முறை அந்த மடத்தை ஒட்டிய பகுதியில் அந்த பெண் தனது காதலனை சந்தித்து தர்மனைக் கொன்று விட்டால் தாங்கள் இருவரும் புதையலை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியதை கேட்ட தர்மன், அந்த பெண்ணை ராட்சஸியாகும் படி சபித்ததால் அவள் ராட்சஸியானாள். தர்மனும் தனது தவசக்தியை இழந்தான்.

munivar

அப்போது அங்கே தோன்றிய அந்த துறவி, தர்மனிடம் அவன் ஜெயனிடம் அளித்த உறுதியை நிறைவேற்றவும், அந்த பெண்ணிற்கு அவன் அளித்த சாபத்தையும் நீக்குமாறு பணித்தார். அப்படி தனக்கு பதிலாக ஜெயனிடம் பணி செய்ய தகுதியான ஆளை தேடிய போது ராமநாதனை தாம் கண்டதாக அவனிடம் கூறினான் தர்மன். தர்மனின் இந்த கதையை கேட்டு அவன் மீது இரக்கம் கொண்ட ராமநாதன் தர்மனுக்கு பதிலாக தாம் ஐந்து ஆண்டுகள் ஜெயனிடம் பணி செய்ய ஒப்புக்கொண்டு அவனிடம் பணிசெய்தான். அப்போது ஜெயன், ராமநாதனிடம் இந்த ஊரில் மாலா என்கிற மிகச்சிறந்த சமையல்காரியிருப்பதாகவும், தான் அதிக ஊதியம் தருவதாக கூறியும் தன்னிடம் வேலைபார்க்க மறுத்துவிட்டதாகவும், அவளை எப்படியாவது தனது மாளிகையில் சமையல் பணியை ஏற்கச்செய்தால் மட்டுமே ராமநாதன் இங்கு மேற்கொண்டு பணிபுரிய முடியும் என்று கூறினான்.

- Advertisement -

இதைக் கேட்டு நேரே மாலாவின் வீட்டிற்குச் சென்ற ராமநாதன், தான் கூறிய படி ஜெயனிடம் வேலை செய்தால் தனக்கு கிடைக்க இருக்கும் செல்வத்தில் பாதியை மாலாவிடம் தாம் பகிர்ந்து கொள்வதாக கூறினான். முதலில் மறுத்த மாலா, ராமநாதனின் நல்ல உள்ளத்திற்காக ஜெயனிடம் பணிபுரிய சம்மதித்து, இருவரும் சேர்ந்து ஜெயனிடம் பணிபுரிந்தனர். ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பு தான் தர்மனுக்கு அளித்த வாக்குறுதி படி ஆயிரம் பொற்காசுகளை, தர்மனுக்கு பதில் அவனிடம் பணிபுரிந்த ராமநாதனிடம் கொடுத்தான். அப்போது ராமநாதன் தன்னுடன் இத்தனை ஆண்டுகள் தனக்காக இங்கு பணிபுரிந்த மாலாவை தான் மனைவியாக அடைந்தால் அதுவே மிகப்பெரும் செல்வம் என்றும், இந்த பொற்காசுகள் தனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டான். அப்போது ராட்சஸியாகும் படி தர்மன் சபித்த அந்த பெண் மீண்டும் மனித உருவை அடைந்தாள்.

vikramathithan kathai

“விக்ரமாதித்தியா செல்வத்திற்காக மிகவும் ஏங்கிய ராமநாதன், ஜெயன் அவ்வளவு செல்வம் அவனுக்கு அளித்த போது அவன் ஏன் மறுத்தான்? மேலும் அவன் எதுவுமே செய்யாமல் ராட்சஸியான அந்த பெண் எப்படி சாப விமோச்சனம் பெற்று மீண்டும் மனித உரு பெற்றாள்? எனக் கேட்டது வேதாளம்.

- Advertisement -

“பணத்தின் மீது ராமநாதனுக்கு முதலில் விருப்பம் அதிகமாக இருந்தாலும், தனது குணத்திற்காக ஐந்து ஆண்டுகள் ஜெயனின் மாளிகையில் தன்னுடன் பணிபுரிந்த மாலாவின் மீது ராமநாதனுக்கு பிரியம் ஏற்பட்டதால், செல்வத்தின் மீதான அவனது மோகம் நீங்கியது. மேலும் மிகப்பெரும் செல்வத்தை மறுக்கும் அவனது சிறந்த குணத்தால் அவன் நேரடியாக அந்த ராட்சஸியின் சாபத்தில் சம்பந்தப்படாவிட்டாலும், அந்த சாபம் நீங்கி அந்தப் பெண் மீண்டும் மனித உருவை பெற்றாள்” என விக்ரமாதித்தியன் பதிலளித்தான். இதைக் கேட்ட உடன் விக்ரமாதித்தியனின் பிடியில் இருந்து தப்பிய வேதாளம், அது முன்பிருந்த மரத்தில் ஏறிக்கொண்டது.

இதையும் படிக்கலாமே:
மந்திர வாளும் இளவரசிக்கான போரும் – விக்ரமாதித்தன் கதை

இது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள் மற்றும் சிறுவர்களுக்கான நீதி நெறி கதைகள் என பல தமிழ் கதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -