பொதுவாக செவ்வாய் பகவான் ஜாதகத்தில் சாதகமான சூழ்நிலையில் இல்லாத பட்சத்தில் அந்த ஜாதகருக்கு கடன் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அதே சமயம் செவ்வாய் பகவான் உடல்ரீதியாகவும் பல பாதிப்புகளை தருவார். அப்படி தரும் பொழுது என்ன மாதிரி பரிகார முறையை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
செவ்வாய் பகவான் என்பவர் பூமி காரகனாக திகழ்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. இடம் வாங்குவது, விற்பது, கடன் கொடுப்பது, வாங்குவது போன்ற அனைத்துக்கும் செவ்வாய் பகவான் காரணமாக விளங்குகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பாதகமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது அல்லது ராகு, சனி, கேது போன்ற கிரகங்களுடன் சேர்ந்து இருக்கும் பொழுது உடல் ரீதியாக பல பிரச்சினைகளை தருவார்.
செவ்வாய் பகவானுக்குரிய உறுப்புகளாக தலை, மண்டை ஓடு, தோள்பட்டை, முதுகு தண்டுவடம் போன்றவை திகழ்கின்றன. மேற்சொன்ன உறுப்புகள் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் அங்கு கண்டிப்பான முறையில் இருக்கும். மேலும் மன அழுத்தம் ஏற்படுவது உணர்ச்சிவசப் படுவது போன்றவை அனைத்திற்கும் செவ்வாய் பகவான் தான் காரணமாக விளங்குகிறார்.
அது மட்டும் அல்லாமல் எலும்புகள் உறுதியோடு இருப்பதற்கும் செவ்வாய் பகவான் உதவி செய்கிறார். ரத்த அளவு அதாவது ஹீமோகுளோபின் அளவு சரியாக இருப்பதற்கு செவ்வாய் பகவானின் அருள் தேவைப்படுகிறது. இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் செவ்வாய் பகவானின் நிலை ஜாதகத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்றார் போல் பரிகாரம் செய்ய வேண்டும்.
செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக முருகப்பெருமான் திகழ்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமானையும் செவ்வாய் பகவானையும் தீபமேற்றி வழிபடுவதன் மூலம் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்திலிருந்து வெளிவர முடியும்.
மேலும் செவ்வாய் பகவானுக்குரிய தானியமாக பருப்பு வகைகள் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக துவரம் பருப்பு, செவ்வாய் பகவானுக்குரிய தானியமாக திகழ்கிறது. இந்த பருப்பை தானம் செய்வதன் மூலமும் செவ்வாய் பகவானின் அருளை நம்மால் பெற முடியும். பருப்பு வகைகளை உபயோகப்படுத்தி செய்யக்கூடிய உணவுகளை தானமாக வழங்குவதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளை நம்மால் பெற முடியும்.
அது மட்டுமல்லாமல் செவ்வாய் பகவான் ரத்த சம்பந்தத்திற்கு உரியவர் என்பதால் நம்முடைய ரத்த சம்பந்தத்தில் இருக்கக்கூடிய உறவினர்கள் கஷ்டப்படும் பொழுது நம்மால் இயன்ற அளவு உதவிகளை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் செவ்வாய் பகவானின் அருள் நமக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: ராகு பகவானால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் மற்றும் பரிகாரங்கள்.
யார் ஒருவர் ரத்த சம்பந்த உறவினர்கள் கஷ்டப்படுவதை பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறார்களோ அவர்களுக்கு செவ்வாய் பகவான் பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்துவார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.