ஸ்ரீராமர் சொன்ன பொய் – இராமாயணத்தில் நடந்த சம்பவம்.

raman
- Advertisement -

மனிதர்கள் பொய்யுரைக்க கூடாது என்கிறது நம்முடைய நூல்கள். அனால் மனிதப்பிறவி எடுத்தால் இறைவன் கூட சில நேரம் பொய்யுரைக்கதான் செய்வார் என்பதற்கு சான்றாக திரிவேணி ராமாயணத்தில் ஒரு சம்பவம் விவரிக்கபட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்…

ramayanam

கைகேயி, ஶ்ரீராமர் வனவாசம் செல்ல தசரதரிடம் வரம் பெற்றுவிட்டார். இதை ராமருக்கு அறிவித்த உடனே அவரும் மனமகிழ்வோடு இளையவனும் ஜானகியும் பின் தொடர மரவுரியோடு வனம் செல்லக் கிளம்பினார். ராமச்சந்திரமூர்த்தி நாடுவிட்டு காடு செல்கிறார் என்ற செய்தியைக் கேட்டதும் மக்கள் துடித்துப் போயினர்.

- Advertisement -

முடி சூடி தங்களைக் காக்கப்போகிறார் என்று மகிழ்ந்திருந்த வேளையில், இந்தச் செய்தி அவர்களுக்குத் தலையில் இடி விழுந்ததைப்போல இருந்தது. தனது பிரியத்துக்குரிய ராமன் தன்னைவிட்டுப் பிரிகிறான், அரண்மனை வாசலை அடைந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டு தசரதரும் கதறி அழுதார். விசுவாமித்திரனுடன் சில நாள்கள் அனுப்பவே தயங்கிய தசரதர், இப்போது 14 ஆண்டுகள் பிரிவை எப்படிப் பொறுத்துக்கொள்வார்?

rama

கைகேயியிடம் பலவாறு கெஞ்சினார். `பரதனே ஆளட்டும். ஆனால், ராமர் வனத்துக்குச் செல்லாமல் பரதனுக்குத் துணையாக இருக்கட்டும்’ என்று எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். ஹூம்,கைகேயி அசைந்து கொடுக்கவில்லை. ஶ்ரீராமர் தேரில் ஏறி அமர்ந்துவிட்டார்.

- Advertisement -

அவரைப் போகவிடாமல் கூட்டம் கூச்சல் போட்டுக்கொண்டு இருந்தது. அப்போது ஶ்ரீராமரிடம், ‘சக்கரவர்த்தி தசரதர், தான் ஶ்ரீராமரைப் பிரிவதை எண்ணி கலங்குகிறார். புத்திர சோகத்தில் கதறுகிறார்’ என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஶ்ரீராமர் வருந்தினார். ஆனாலும், உடனே தேரைக் கிளப்புமாறு கூறுகிறார். அதே வேளையில் தசரதர் உப்பரிகையில் நின்று ஶ்ரீராமரின் தேரை நிறுத்துமாறு ஆணையிடுகிறார்.

rama

தேரோட்டி சுமந்திரர் தேரை நிறுத்த முயல்கிறார். அவரிடம் ஶ்ரீராமர் தேரை வேகமாக செலுத்தும்படி சொல்கிறார். சுமந்திரர், ராமரிடம், ‘அரசரின் ஆணையை மீறினால் அது தவறாகுமே? தங்களை விட்டுவிட்டு திரும்ப வந்தால், எனக்குத் தண்டனை கிடைக்குமே’ என்று வருந்துகிறார். அங்குதான் வாய்மையே வடிவான ராமச்சந்திரமூர்த்தி பொய் உரைக்கிறார்.

- Advertisement -

ஆம், ‘சுமந்திரரே கவலை வேண்டாம், தந்தையார் கேட்டால் மக்கள் போட்ட கூச்சலில் தங்கள் ஆணை கேட்கவில்லை என்று கூறி விடுங்கள். இன்னமும் இங்கே இருந்து அவரைக் கலங்கவிட வேண்டாம். என் மனதும் தாங்காது. உடனே கிளம்புங்கள்’ என்கிறார். சுமந்திரரும் கலங்கிவிடுகிறார். தேரும் கிளம்புகிறது.

rama

தந்தை தனது பிரிவைத் தாளாது கலங்குகிறாரே, தாம் அவரைவிட்டு சீக்கிரமே கிளம்பினால் தந்தை சமாதானமாகிவிடுவாரே என்ற எண்ணத்தில்தான் ஶ்ரீராமர் அவ்விதம் பொய் கூறினார் என்று திரிவேணி ராமாயணம் குறிப்பிட்டுள்ளது. மெல்லிய மனம்கொண்ட ராமச்சந்திரமூர்த்தி தந்தையின் கண்ணீரை விரும்புவாரா? அதனால்தான் பொய் சொன்னார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஶ்ரீராமரையே பொய் சொல்ல வைத்த விதியை என்னவென்று சொல்வது?

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம், எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஆகையால் ராமர் இங்கு பொய் சொன்னாலும் அது உண்மையாகவே கருதப்படுகிறது.

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான குட்டி கதைகள் மற்றும் சிறு கதைகளுக்கு தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து உடனுக்குடன் படியுங்கள்.

- Advertisement -