இப்படி ரசம் வச்சா சாப்பாட்டில் ஊற்றி சாப்பிட மாட்டாங்க. அப்படியே குடிப்பாங்க. அந்த அளவுக்கு இந்த ரசத்தின் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

rasam
- Advertisement -

சில பேருக்கு இந்த ரசம் வைப்பதில் ரொம்ப ரொம்ப கஷ்டம் இருக்கும். எப்படி தான் ரசம் வைத்தாலும், அந்த ரசத்தில் சுவை இருக்காது. ஆனால் போடக்கூடிய பொருட்கள் எல்லாம் ஒன்றுதானே. எல்லோர் வீட்டிலும் ரசம் வைப்பதற்கு தக்காளி, புளி மிளகு, சீரகம் பூண்டுதான் போடப்போகிறார்கள். அப்படி ஸ்பெஷலாக ரசம் மணப்பதற்கு என்னதான் காரணம். எப்படித்தான் சுவையான ரசம் வைப்பது. பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோமா. இந்த ரெசிபியை படிச்சிட்டு ரசம் வச்சு பாருங்க. நிச்சயமா உங்க ரசம் விஷம் மாதிரி இருக்காது.

செய்முறை 

முதலில் 20 கிராம் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து கரைத்து, புளி கரைசலை ரெடி பண்ணிக்கோங்க. அடுத்து மிக்சி ஜார் எடுத்துக்கோங்க. அதில் பூண்டு பல் 10, சீரகம் 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், போட்டு கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டி இதையும் வழித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அதே மிக்ஸி ஜாரில் பழுத்த மூன்று தக்காளி பழங்களை போட்டு விழுதாக அரைக்கவும்.

- Advertisement -

உங்களால் புளிக்கரைசலில் போட்டு கையாலேயே தக்காளியை நன்றாக கரைக்க முடியும் என்றால் கரைத்துக் கொள்ளலாம். பழுத்த தக்காளியை கரைத்து விடலாம். தக்காளி கொஞ்சம் கட்டியாக இருந்தால் கரைப்பதில் சிரமம் இருக்கும். அதனால் மிக்ஸி ஜாரில் போட்டுக்கலாம் தவறு என்றும் கிடையாது.

அடுத்து மூன்று சின்ன வெங்காயப் பல் எடுத்து ஒரு இடுக்கியில் ஒன்றும் இரண்டுமாக தட்டி வச்சுக்கோங்க. அதுவும் அப்படியே தனியாக இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊத்திக்கோங்க. அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பழத்தை ஊற்றி ரசத்துக்கு தேவையான அளவு உப்பு போட்டு, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு, உங்கள் கையை கொண்டு அந்த தக்காளி பழத்தையும் ரசத்தையும் ஒருமுறை கரைக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் தக்காளியை அரைத்து ஊற்றினாலும் இப்படி ரசத்தை கையால் கரைத்துக் கொடுக்கும் போது, ஒரு ருசி கிடைக்கும். இப்போது இந்த கரைசல் அப்படியே இருக்கட்டும். இந்த ரசத்திற்கு 500ml தண்ணீரில் இருந்து 600ml தண்ணீர் சரியாக இருக்கும்.

சரி இப்போது ரசத்தை தாளித்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், வெந்தயம் ஒரு சிட்டிகை, வர மிளகாய் கிள்ளியது 3 போட்டு, மிளகாய் பொன்னிறமாக சிவந்து வந்ததும் கருவேப்பிலை 1 கொத்து, இடித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம் போட்டு, ஒரு நிமிடம் வதக்குங்க. அதன் பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்த மிளகு சீரக விழுது, மல்லித்தழை கொஞ்சம், போட்டு 10 செகண்ட் வரை வதக்கி, பெருங்காயத்தூள் போட்டு, புளி கரைசலையும் தக்காளி கரைசல் உப்பு போட்டு கரைத்து வைத்திருக்கிறோம் அல்லவா, அந்த கலவையை இந்த கடாயில் தாளிப்பில் ஊற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இனி இட்லிக்கு சாம்பார் செய்யும் போது இந்த காய் சேர்த்து சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க.

உப்பு காரம் புளிப்பு சரி பார்த்துக்கோங்க. ரொம்பவும் புளி அதிகமாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றலாம். ரசம் மிதமான தீயில் இரண்டு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, இதை உடனடியாக இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும். அவ்வளவுதான். தேவைப்பட்டால் இதன் மேலே இன்னும் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி ஒரு மணி நேரம் கழித்து, ரசத்தை ருசித்து பாருங்கள். ஆஹா இதுவல்லவா ரசம். 2 நாள் கூட இந்த ரசத்தை வைத்து சாப்பிடலாம். ருசியாக இருக்கும். ரசம் பிடிக்கும் என்பவர்கள் இந்த ரெசிபி படி ஒரு முறை ரசத்தை வச்சு சாப்பிட்டு பாருங்க.

- Advertisement -