தமிழ் புத்தாண்டு (14/4/2021) முறையாக எளிமையாக வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி? ஆண்டு முழுவதும் செல்வம் செழிக்க இதை செய்ய மறக்காதீர்கள்!

tamil-new-year-chithirai
- Advertisement -

ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் நாளில் தமிழ் வருடப் பிறப்பானது தமிழர்களால் அவரவர் இல்லங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை விட தமிழ் புத்தாண்டுக்கு மிகவும் விசேஷமான பலன்கள் உண்டு. சித்திரை முதல் நாளன்று புத்தாண்டை வரவேற்க செய்யக்கூடிய பூஜைகளை பற்றிய முறையான விவரங்களையும், அதற்குரிய பலன்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

chithirai-thirunal-poojai

தமிழ் வருடப்பிறப்பு என்றாலே ‘கனி காணுதல்’ என்கிற சடங்கு சாஸ்திரம் பின்பற்றப்படும். ஆண்டின் முதல் நாள் கனிகளை கண்ணாடியில் கண்டபின் தான் அன்றைய நாளின் துவக்கம் இருக்கும். அப்படி இருந்தால் தான் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியுடனும், வீட்டில் செல்வ செழிப்புடனும் இருக்கும் என்பது நம்பிக்கை. புத்தாண்டு பிறப்பில் முதல் நாளே வீடு முழுவதும் துடைத்து சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்காரம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். புத்தாண்டை வரவேற்க புத்தம் புதிய கண்ணாடியும், முக்கனிகளும், அறுசுவை உணவும், உங்களிடமிருக்கும் பொன் ஆபரண நகைகளும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

புத்தம் புதிய கண்ணாடியை வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூச்சூடி, பூஜை அறையில் கிழக்கு பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். கண்ணாடியின் முன்பு பெரிய தாம்பூலத் தட்டில் ரூபாய் நோட்டுக்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் உங்களிடம் இருக்கும் பொண்னாபரண நகைகள் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வையுங்கள். உங்களுக்கு விருப்பமான பழ வகைகளை அடுக்கி வைக்க வேண்டும். அதில் முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவை இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

tamil new year

மறுபுறம் சிறு சிறு கிண்ணங்களில் நவதானியங்கள், அரிசி, பருப்பு, கல் உப்பு, வெல்லம், மஞ்சள் ஆகியவற்றை வைக்க வேண்டும். இதில் கல்லுப்பு மற்றும் மஞ்சள் அன்றைய நாள் காலையில் கடைக்கு சென்று வாங்கி வருவது இன்னும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். கல் உப்பு மற்றும் மஞ்சள் மங்களகரமான மகாலட்சுமியின் அம்சமாகும். ஆகவே இவற்றை சுபயோக தினமாக விளங்கும் தமிழ் புத்தாண்டில் முதல் செலவாக வாங்குவது அவ்வாண்டில் சுபீட்சத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அமையும்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் குடும்பத்தின் தலைவியாக விளங்கும் மூத்த பெண்கள் நேராக பூஜை அறைக்கு சென்று கண்ணாடியில் கனி காணுதல் என்ற சம்பிரதாயத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அதாவது கண்ணாடியில் நீங்கள் தாம்பூலத்தில் வைத்திருக்கும் கனிகள் தெரியுமாறு இருக்க வேண்டும். கனிகள், பழங்கள், ரூபாய் நோட்டுக்கள், நகைகள், தானியங்கள் ஆகியவற்றை தரிசனம் செய்த பின்னர் குளித்து முடித்து விட்டு நைவேத்தியங்களை தயார் செய்ய வேண்டும். ஒரு சிறிய கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் பச்சை கற்பூரம் மற்றும் பூக்களை போட்டு வையுங்கள்.

pongal-panai1

நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது பாசிப்பருப்பு பாயாசம் செய்து வைக்கலாம். 6 வகையான சுவைகளும் இருக்கும் படி உணவு தயார் செய்வது கூடுதல் பலன் தரும். பின்னர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக கண்ணாடியில் கனிகளை கண்டபின் குளிக்க செல்லுவது நலமாகும். வீடு முழுவதும் மாவிலைத் தோரணங்களை கட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். மாவிலை தோரணங்களில் இருந்து வரும் தெய்வீக ஆற்றல் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை அழிக்கும். பின்னர் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் இருந்து, சிறியவர்கள் ரூபாய் நோட்டுகளை அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி பெற்றுக் கொள்ள வேண்டும்.

Navathaniyam

புதிய துணிமணிகள் வாங்கி வைத்திருந்தால் அதையும் பெரியவர்களின் கைகளிலிருந்து நீங்கள் பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது. பூஜை முடிந்து காக்கைக்கு உணவு படைத்து, நாமும் பிரசாதம் எடுத்துக் கொள்ளலாம். உங்களால் முடிந்தவர்களுக்கு அன்ன தானம் செய்யுங்கள். உலக மக்கள் வறுமை இன்றி இருக்கவே நவதானியங்கள் வைக்கப்படுகின்றது. கனிகளை போல சுவையான ஒரு வாழ்வை இவ்வாண்டு முழுவதும் நாம் பெறவே கனி காணுதல் நிகழ்வு சித்திரை தமிழ் புத்தாண்டு திருவிழாவில் நிகழ்த்தப்படுகிறது. மிக எளிமையாக வீட்டிலேயே வரவிருக்கும் ஸ்ரீ பிலவ புத்தாண்டை வரவேற்று பூஜைகளை செய்து இறை அருளைப் பெருவோம்.

- Advertisement -