தக்காளி குழம்பு எளிமையாக செய்யக்கூடியது ஆனால் எல்லா வகையான டிபன் மற்றும் சாதத்துக்கும் ருசியாக இருக்க கூடிய ஒன்றாகவும் இது இருப்பதால் அடிக்கடி வீட்டில் செய்வார்கள். காய்கறி இல்லாத சமயங்களில் கைகொடுக்கக்கூடிய இந்த தக்காளி குழம்பு செய்யும் பொழுது கொஞ்சம் இதையும் வறுத்து அரைச்சி சேர்த்து பாருங்கள், ருசி அபாரமாக இருக்கப் போகிறது. சுவையான தக்காளி குழம்பு எளிதாக எப்படி செய்வது? என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்
- சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- கடுகு – அரை ஸ்பூன்
- சோம்பு – கால் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – இரண்டு
- பச்சை மிளகாய் – 4
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- தக்காளி – 5
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- தனியா தூள் – 3 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைக்க
- கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
- வெந்தயம் – 10
- சீரகம் – 1/4 ஸ்பூன்
- மிளகு – கால் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – இரண்டு
செய்முறை
இந்த தக்காளி குழம்பு செய்வதற்கு முதலில் வறுத்து அரைக்க தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், மிளகு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசான தீயில் நன்கு ரெண்டு நிமிடம் வதக்கி எடுக்க வேண்டும். வதக்கி எடுத்த பொருட்களை சூடு இல்லாமல் ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் மற்ற பொருட்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் கொஞ்சம் போல சோம்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்தால் இன்னும் சுவை சூப்பராக இருக்கும்.
வெங்காயம் வதங்கி வரும் பொழுது கருவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்குங்கள். இப்போது பழுத்த ஐந்து தக்காளி பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு மசிய வேக விட வேண்டும். தக்காளி குழம்பு செய்யும் பொழுது குறைந்த தீயில் வைத்து நன்கு மசிய செய்து பாருங்கள், ருசி அபாரமாக இருக்கும்.
பொறுமையாக தக்காளி வெந்து மசியும் வரை காத்திருங்கள். பிறகு மிளகாய் தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். மசாலா வாசம் போனதும் ஒரு முறை நன்கு கலந்து விட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தக்காளி குழம்பு நன்கு கொதித்து சுண்டி வரும் பொழுது, நீங்கள் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் நன்கு கொதித்து சுண்டிய பிறகு நறுக்கிய மல்லி தழையை அப்படியே மேலோட்டமாக தூவி சுடச்சுட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அருமையான சுவையுடன் இருக்கும். நீங்களும் இதே மாதிரி தக்காளி குழம்பு ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.