2 நிமிஷத்தில சுவையான ‘வேர்க்கடலை கார சட்னி’ இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க, 10 இட்லி இருந்தாலும் பத்தவே பத்தாது!

verkadalai-chutney
- Advertisement -

வேர்கடலை சட்னி வித்தியாசமான முறையில் ரொம்பவே சுலபமாக இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க எவ்வளவு இட்லி கொடுத்தாலும் கொஞ்சம் கூட சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். காரசாரமான இந்த வேர்கடலை சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ரொம்பவே சூப்பராக இருக்கும். என்னடா சட்னி செய்வது? என்று யோசிக்கும் பொழுது நீங்கள் ஏற்கனவே வேர்க்கடலையை வறுத்து வைத்து இருந்தால் இரண்டு நிமிடத்தில் இப்படி ஒரு சட்னியை செய்து பாருங்கள், வீட்டில் இருக்கும் அனைவரும் உங்களை பாராட்டி தள்ளிவிடுவார்கள். சுவையான வேர்க்கடலை கார சட்னி எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் நாமும் தெரிந்து கொள்வோம்.

வேர்க்கடலை கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 50 கிராம், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 1, மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், பூண்டு பற்கள் – 2.

- Advertisement -

வேர்க்கடலை கார சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் 50 கிராம் அளவிற்கு வேர்க் கடலையை எடுத்து வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள். ஆறிய பின்பு வேர்க்கடலையை தோல் நீக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி போன்றவற்றை நன்கு சுத்தம் செய்து தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். 2 டீஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்குங்கள். சட்னிக்கு தேவையான உப்பை இப்போதே சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கி வரும் பொழுது வெட்டி வைத்துள்ள தக்காளித் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு வெறும் மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

மிளகாய் தூள் பச்சை வாசம் போக லேசாக வறுத்து அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆற வைத்த பொருட்களை சேர்த்து, நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள வேர்க்கடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளிக்கு பதிலாக சட்னி அரைக்கும் பொழுது சிறிதளவு புளியும் சேர்த்து அரைக்கலாம். இப்போது இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்.

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வரும் பொழுது கறிவேப்பிலை மற்றும் ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் தாளித்தவற்றை சட்னியுடன் சேர்த்து கலந்து வைத்து விடுங்கள் அவ்வளவுதான்! சுவையான இந்த வேர்கடலை கார சட்னி நீங்களும் இதே முறையில் ஒரு முறை செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!

- Advertisement -