கோவிலில் கொடுக்கும் புளியோதரை போலவே சுவை மாறாமல் அப்படியே இருக்க நீங்கள் இப்படித்தான் புளிசாதம் செய்ய வேண்டும் தெரியுமா?

temple-puliyotharai
- Advertisement -

நாம் என்னதான் மெனக்கெட்டு புளி சாதம் சமைத்தாலும் கோவிலில் கொடுக்கப்படும் புளியோதரை கொடுக்கும் சுவை கொடுக்கவில்லையே? என்று ஏங்குபவர்களுக்கு அதனை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கோவிலில் கொடுக்கப்படும் புளியோதரை போலவே இருக்க சில பொருட்களை நாம் சரியாக கையாண்டு சமைக்க வேண்டும். இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவின்படி பொருட்களையும், செய்முறையின் படியும் நீங்கள் ஒரு முறை புளியோதரை செய்து பாருங்கள்! அசல் கோவில் புளியோதரை சுவை போலவே அவ்வளவு சுவையை கொடுக்கும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

thiruvenkadu-temple

கோவில் புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்:
பழைய புளி – 50 கிராம், புதிய புளி – 50 கிராம், வேர்கடலை – அரை கப், வறுத்து அரைக்க: கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், கருப்பு எள் – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தனியா விதை – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, தாளிக்க: நல்லெண்ணெய் – தேவையான அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், வர மிளகாய் 5, கருவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், தனி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கோவில் புளியோதரை செய்முறை விளக்கம்:
புளியோதரை நன்கு நிறமாக இருக்க பழைய புளியை பாதியும், சுவையாக இருக்க புதிய புளியை பாதியும் சேர்ப்பது நல்லது. சம அளவு புளியை எடுத்துக் கொண்டு ஒருமுறை தண்ணீரில் அலசி சுடு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள். பின்னர் வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்துள்ள ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக சேர்த்து லேசாக வறுத்து எடுக்க வேண்டும். மொத்தமாக சேர்த்து வறுத்து விடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Puliyotharai

கடுகு, மிளகு, கருப்பு எள், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்த பின்பு நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். கோவில் புளியோதரைக்கு நல்லெண்ணெய் தான் சிறந்த எண்ணெய், அப்போது தான் அதன் மணம் அதிகரிக்கும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் தாளிக்க கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் வெந்தயம், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். பின்னர் வர மிளகாய்களைக் கில்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு புளியை நன்கு கரைத்து கொட்டைகள், திப்பிகள் எதுவும் இல்லாமல் வடிகட்டி இதனுடன் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். புளி பாதி அளவிற்கு நன்கு கொதித்து கெட்டியானதும் நீங்கள் அரைத்து வைத்துள்ள பொடியிலிருந்து பாதி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். மீதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பொடி சேர்த்ததும் இன்னும் கொஞ்சம் திக்காக வரும். புளி கெட்டியாகி எண்ணெய் மேலே தெளிந்ததும், பச்சை கறிவேப்பிலை போட்டு கலந்து விட்டு கொள்ளுங்கள்.

Puliyotharai

பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி தோலுரித்த வேர்கடலைகளை அரை கப் அளவிற்கு சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வடித்து வைத்துள்ள உதிரி உதிரியான சாதத்துடன் வேர்க்கடலை சேர்த்து தேவையான அளவிற்கு புலி கலவையும், அரைத்து வைத்திருக்கும் பொடியை 2 ஸ்பூன் போட்டு கலந்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தால் அற்புதமான புளி சாதம் தயார். இந்த புளி சாதம் பிரசித்தி பெற்ற கோவில்களில் கொடுக்கப்படும் புளி சாதம் போலவே அவ்வளவு அருமையான ருசியை கொடுக்கும். புரட்டாசி சனிக்கிழமையில் இதனை செய்து பெருமாளுக்கு படைக்க அந்த பெருமாளே நேரடியாக வந்து உங்களை ஆசீர்வதிப்பார். நீங்களும் ஒருமுறை இதே முறையில் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -