இந்த உலகத்தில் தவறுகள் செய்யாத மனிதனே இல்லை என்று கூறலாம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தத்தம் சூழ்நிலைக்கு ஏற்ப ஏதாவது ஒரு தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறோம். செய்த தவறுகளை நினைத்து வருத்தப் படுவதும், அதற்கான பிராயச்சித்தம் தேடுவதும் தான் சிறந்த குணம் ஆகும். அப்படி இருக்கும் பொழுது சிலர் செய்யும் தவறுகளை ஒப்புக் கொள்கிறார்கள் எனில் அதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்! தவறுகளை ஒப்புக் கொள்ளத் தானே செய்கிறார்கள்? ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? என்று மனம் குழப்பம் அடைகிறதா? சரி அதற்கான விடையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இப்போது இருக்கும் காலகட்டங்களில் எல்லோரும், எல்லோருக்கும், எல்லா இடங்களிலும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. சில விஷயங்களை மறைப்பதில் நன்மைகள் நடைபெறும் என்றால் அதனை மறைத்து விடலாம். எந்த சூழ்நிலையிலும் பொய்யே கூறக்கூடாது என்று அரிச்சந்திர புராணம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஆனால் ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை செய்யலாம் என்றும் அதே சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது எனவே நேரத்திற்கு தகுந்தாற் போல் நன்மைகளுக்காக செய்யும் தவறுகளும், பொய்களும் தவறில்லை.
சிலர் சிறிய சிறிய பொய்களை ஒப்புக் கொண்டு விடுகிறார்கள் என்று அவர்களை நியாயவான்கள் என்று எளிதில் எடை போட்டு விடாதீர்கள். சிறிய சிறிய தவறுகளை தானே முன் வந்து ஒப்புக் கொள்கிறார்கள் என்றால், ஏதோ ஒரு பெரிய தவறை அவர்கள் மறைக்கிறார்கள் என்பது தான் இங்கு புலப்படுகிறது. பெரிய தவறை மறைக்கவே சிறிய தவறுகளை ஒப்புக் கொள்கிறார்கள் என்கிற வாதமும் உண்டு.
‘நான் உத்தமன், நான் தவறே செய்யாதவன், என்று கூறுபவர்களை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம். சில சமயங்களில் தவறு செய்பவர்கள் தன்னைத் தானே உத்தமன் என்று கூறுவதில் பின்வாங்குவது உண்டு. ஏனென்றால் அவர்களுடைய மனசாட்சி அதுக்கு இடம் கொடுப்பது இல்லை. ஆனால் உண்மையிலேயே உத்தமர்களாக இருப்பவர்கள், தன்னை தானே ‘நான் உத்தமன்’ என்று கூறிக் கொள்வதில் எனக்கு ஒரு அசிங்கமும் இல்லை என்று மார் தட்டிக் கொள்வார்கள் எனவே அவர்களை தவறாக எடை போடுவதும் சில சமயங்களில் தவறாகிவிடும்.
எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நாம் தீர்க்கமாக நம்ப வேண்டும் என்றால் அதனை எப்பொழுதும் சந்தேக கண்ணுடன் முதலில் உற்று நோக்குங்கள். அதன் பின் அதற்குரிய ஆராய்ச்சிகளில் நமக்கு அதற்கான முழு விளக்கமும், முழு நம்பிக்கையும் உண்டாகி விடும். அதன் பிறகு அதன் மீது எந்த ஒரு சந்தேகமும் நமக்கு நிச்சயம் ஏற்படுவதில்லை. செய்யும் செயலிலும், சொல்லும் சொல்லிலும் உண்மையும், நியாயமும் இருப்பவர்கள் இரண்டு நிமிடம் சிந்தித்து தான் அதை உபயோகப் படுத்துகிறார்கள்.
தாம் தூம் என எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் சட்டென வார்த்தையை விட்டு விடுபவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தங்களின் சுயரூபத்தை காட்டி மாட்டிக் கொள்வார்கள். சில சமயங்களில், சில விஷயங்களில் உண்மை வெளியில் வருவதற்குள் பொய்யானது பாதி உலகத்தை சுற்றி வந்து விடும். அதன் பிறகு தான் உண்மை நிலை நமக்கு தெரியவரும். எனவே அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் உண்மை நிலையை ஆராய்ந்து சுய புத்தியை தீட்டி பின்னர் முடிவெடுங்கள்.