தேங்காய் பூரி செய்முறை

rice flour poori
- Advertisement -

எப்போதும் போல் ஒரே மாதிரி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று செய்து செய்து போர் அடித்து விட்டது என்று நினைப்பவர்களும், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் ஒருமுறை இந்த ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம். பொதுவாக பூரி என்றதும் நாம் கோதுமை மாவு அல்லது மைதா மாவில் தான் செய்வோம் அதை தவிர்த்து விட்டு அரிசி மாவில் தேங்காயை சேர்த்து செய்து பார்ப்போமா?

இந்தப் பூரியை செய்வதற்கு பெரிதும் நாம் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. மிகவும் எளிமையான முறையில் அதேசமயம் சுவையும் அருமையாக இருக்கக்கூடிய வித்தியாசமான தேங்காய் பூரியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி மாவு – 2 கப்,
  • தேங்காய் – 1/2 மூடி
  • தண்ணீர் – 2 கப்,
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் பொறிப்பதற்கு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பச்சரிசி மாவை ஒரு கடாயில் போட்டு மூன்று நிமிடம் மிதமான தீயில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும். பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை கீறி அதில் அடியில் இருக்கக்கூடிய தோலை மட்டும் நீக்கிவிட்டு வெள்ளை பகுதியை அப்படியே மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து இதோடு 2 டீஸ்பூன் அளவு எண்ணெயும் ஊற்றி கொதிக்க விட வேண்டும். மற்றொருபுறம் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து நாம் ஏற்கனவே ஆர வைத்திருக்கும் பச்சரிசி மாவை அதில் சேர்க்க வேண்டும். பிறகு இதில் பொடியாக அரைத்து வைத்திருக்கும் தேங்காயும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் வைத்திருக்கும் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இந்த தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கரண்டியை வைத்து நன்றாக கிளறி விட வேண்டும். மாவு சூடு குறைந்ததும் கையை வைத்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். கையில் ஒட்டாத அளவிற்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த மாவை பிணைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டை வைத்து பத்து நிமிடம் மூடி வைத்து விடுங்கள்.

இப்பொழுது ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெயை தடவி அதற்கு மேல் நாம் பிணைந்து வைத்திருக்கும் மாவை சிறு உருண்டையாக எடுத்து நன்றாக உருட்டி அதில் வைத்து கையால் மெல்லியதாக தட்டிக் கொள்ள வேண்டும். அப்படி கையால் தட்ட தெரியாதவர்கள் அந்த மாவிற்கு மேல் மற்றொரு பிளாஸ்டிக் கவரையோ அல்லது இலையையோ வைத்து அதற்கு மேல் தட்டை வைத்து லேசாக அமுக்கினால் மெல்லியதாக மாவு வந்துவிடும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து அதில் பூரியை பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடான பிறகு நாம் தட்டி வைத்திருக்கும் இந்த பூரியை எண்ணெயில் போட்டு விட வேண்டும். பூரி நன்றாக உப்பி மேலே வரும் பொழுது அதை பிரட்டி போட்டு இரண்டு புறமும் நன்றாக வெந்த பிறகு எடுத்து தட்டில் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: முள்ளங்கி சப்பாத்தி செய்முறை

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இருக்கக்கூடிய இந்த தேங்காய் பூரியை ஒரு முறையாவது செய்து கொடுங்கள். மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள்.

- Advertisement -