திருமண தடை நீக்கும் வாழைப்பூ கலசம்

vazhai poo
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் என்று பல இருக்கும். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக திகழ்வதுதான் திருமணம். திருமணம் அதற்குரிய வயதில் நடைபெறாவிட்டால் அதனால் மன உளைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு பல பரிகாரங்களும் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றான வாழைப்பூ கலச பரிகாரத்தை எப்படி செய்தால் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

திருமணத்தடை என்பது நவகிரகங்களாலும் அல்லது நவகிரகங்களாலும் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களாலும் ராசியாலும் நட்சத்திரத்தாலும் ஏற்படலாம். இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்து விரைவிலேயே திருமணம் நடைபெறுவதற்குரிய வாய்ப்பை தர உதவக்கூடிய பரிகாரமாக தான் வாழைப்பூ கலச பரிகாரம் திகழ்கிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை விடியற்காலையில் தான் செய்ய வேண்டும். அதுவும் சம்பந்தப்பட்ட நபர் தான் செய்ய வேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் செய்யக்கூடாது. மேலும் இந்த பரிகாரத்திற்காக நாம் உபயோகப்படுத்தும் பொருட்களை புதிதாக கடையில் இருந்து வாங்கி வர வேண்டுமே தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது. அதேபோல் மீதம் இருக்கும் பொருட்களையும் வேறு எதற்காகவும் உபயோகப்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிகாரத்தை செய்பவர் விடியற்காலையில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு கிழக்கு முகமாக பார்த்து அமர வேண்டும். அவர்களுக்கு முன்பாக ஒரு தலை வாழை இலையை வைத்து அதற்கு நடுவில் சிறிது பச்சரிசியை கொட்டி அதன் மேல் ஒரு பானையில் சந்தனம் குங்குமம் இட்டு வைக்க வேண்டும். பிறகு அதற்கு மேல் 9 மா இலைகளை வைத்து அதற்கு நடுவில் வாழைப்பூவை வைக்க வேண்டும். அவ்வாறு வாழைப்பூவை வைக்கும் பொழுது அந்த வாழைப்பூ இதழ்களை தாமரை விரிப்பது போல் விரித்து வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக 27 சிறு குச்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த குச்சிகளின் நுனியில் பஞ்சதிரியை சுற்றி வைத்து அந்த திரி நல்லெண்ணெயில் ஊருமாறு வைத்து விட வேண்டும். நன்றாக ஊரிய பிறகு அந்த 27 குச்சிகளையும் நாம் விரித்து வைத்திருக்கும் வாழைப்பூ இதழ்களில் சுற்றி குத்தி வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அவருக்கு குங்குமம் இட்டு வைத்து விட வேண்டும்.

பிறகு நமக்கு தெரிந்த விநாயகரின் போற்றியை கூறியோ அல்லது சுலோகத்தை கூறியோ அவருக்கு அருகம்புல் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அவருக்கு நெய்வேத்தியமாக 2 வெற்றிலை பாக்கு இரண்டு வாழைப்பழம் வைத்து விட வேண்டும். கலசத்திற்கும் நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை வைக்க வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு நாம் ஏற்கனவே வாழைப்பூவில் சொருகி இருக்கும் 27 திரிகளில் தீபம் ஏற்ற வேண்டும். வாழைப்பூவை சுற்றி 27 தீபங்கள் எரியும் பொழுது நம்முடைய குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக்கொண்டு அந்த கலசத்தை மூன்று முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

பெற்றோரின் காலில் விழுந்த ஆசிர்வாதம் பெற வேண்டும். இந்த தீபம் முழுவதும் எரிந்து முடித்த பிறகு இந்த பரிகாரத்திற்கு உபயோகப்படுத்திய அனைத்து பொருட்களையும் ஒரு கட்டைப்பையில் எடுத்து வைத்து அதை கொண்டு போய் ஓடுகின்ற நீரிலோ அல்லது கடலிலோ போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியின் அருளை பெற வில்வ இலை அர்ச்சனை.

இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தாலே போதும் 30 நாட்களில் திருமண தடை விலகி திருமண பேச்சுக்கள் நல்லபடியாக ஆரம்பிக்கும்.

- Advertisement -