இட்லி, தோசை, குழி பணியாரம், பொங்கல், இதற்கெல்லாம் தொட்டு சாப்பிட அருமையான உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் ஒரு சட்னி அரைக்கலாம் வாங்க.

chutney1
- Advertisement -

எப்போதுமே ஒரே மாதிரி சட்னி சாப்பிட்டு போர் அடிக்குதா. இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சுலபமாக ஏதாவது சட்னி அரைத்தால் நன்றாக தான் இருக்கும். வீட்டில் இருப்பவர்களும் பாராட்டுவார்கள். ஈசியாகவும் இருக்கணும். அதேசமயம் சுவை, வித்தியாசமாகவும் இருக்கணும். அப்படி ஒரு சட்னி ரெசிபி தாங்க இது. சில உடுப்பி ஹோட்டல்களில் இந்த மாதிரி சட்டினி கிடைக்கும். ஆனால் இதை எப்படி செய்வார்கள் என்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த உடுப்பி ஓட்டல் சட்னி ரெசிபியை இன்றைக்கு நாம் தெரிந்து கொள்வோமா.

செய்முறை

முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்த புதினா 1/2 கைப்பிடி அளவு, சுத்தம் செய்த மல்லித்தழை 1/2 கைப்பிடி அளவு போட்டு இரண்டு நிமிடம் வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அதே கடாயில் 1/2 ஸ்பூன், எண்ணெய் ஊற்றி 4 பச்சை மிளகாய்களை போட்டு வதக்குங்கள்.

- Advertisement -

பச்சை மிளகாய் பச்சை வாசம் போக லேசாக வதங்கி வந்தவுடன், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் 2 போட்டு, வதக்குங்கள். வெங்காயம் நன்றாக நிறம் மாறி வதங்கி வந்தவுடன், இதில் கோலி குண்டு அளவு புளியை, போட்டு மீண்டும் ஒருமுறை வதக்கி, பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் 3 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு, போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது கடாயில் வதக்கி வைத்திருக்கும் எல்லா பொருட்களும் நன்றாக ஆரட்டும். அதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். புதினா கொத்தமல்லி தழையை போடக்கூடாது. அது அப்படியே இருக்கட்டும். மிக்ஸி ஜாரில் சேர்த்த மற்ற பொருட்களை எல்லாம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இறுதியாக வதக்கி வைத்திருக்கும் புதினா கொத்தமல்லி தழையை போட்டு மிக்ஸியை பல்ஸ் மோடில் இரண்டு ஓட்டு ஓட்டணும்.

- Advertisement -

மொழு மொழு என்று நாம் போட்ட கீரை அரைப்படக்கூடாது. அந்த வெள்ளை சட்டினியில் ஆங்காங்கே இந்த பச்சை நிற கீரை தெரியவேண்டும். அப்போதுதான் இந்த சட்னியின் சுவை கூடுதலாக கிடைக்கும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இப்படி ஒரு பச்சை மிளகாய் சட்னி ரெசிபி நம்ம கொள்ளு பாட்டிக்கு கூட தெரிஞ்சி இருக்காது. சுட சுட இட்லிக்கு மேல ஊத்தி சாப்பிட இது வேற லெவல் டேஸ்ட் கொடுக்கும்.

தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, உளுந்து, கருவாப்பிலை, வரமிளகாய், பெருங்காயம், தாளித்து இந்த சட்னியில் கொட்டி மணக்க மணக்க சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவை எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சட்னியில் வெங்காயம் சேர்த்து இருக்கின்றோம். ஆகவே பச்சை மிளகாய் காரம் சுருக்குன்னு இருந்தால் தான் சுவை தரும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம இத ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -