வியாபாரம் செய்யும் இடம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பலவிதமான நன்மைகள் வந்து சேர உதவும் எளிமையான வாஸ்து குறிப்புகள்

vasthu
- Advertisement -

சிலருக்கு வாஸ்து சாஸ்திரம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், இன்றைய காலத்தில் பலரும் வாஸ்து சாஸ்திர அடிப்படையிலேயே தங்கள் இல்லம், தொழில் வியாபார தளங்கள் போன்றவற்றை அமைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ஒருவரது வாழ்வில் நல்ல பலன்கள் கிடைக்கப் பெற பின்பற்ற வேண்டிய சில எளிய வாஸ்து சாஸ்திர குறிப்புகளை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் உங்கள் வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் போன்ற அனைத்து பகுதிகளிலும் மின் விளக்குகள் எரிய விடப்பட வேண்டும். குறிப்பாக வீட்டின் தலை வாயில் பகுதியில் மின் விளக்கு வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தெய்வீக ஆற்றல்கள் ஒரு வீட்டிற்குள் செல்ல தலை வாயில் பகுதி தான் காரணமாக உள்ளது. எனவே அந்த தலை வாயில் பகுதி மாலை மற்றும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்தது போன்று வைக்காமல் மின்விளக்கு வெளிச்சம் அல்லது தீப ஒளியாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இல்லறம் என்னும் நல்லறத்திற்கே அடிப்படையாக இருப்பது அந்த வீட்டில் வாழும் குடும்பம் தான். உங்கள் வீட்டு வரவேற்பு அறையின் சுவற்றில் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை மாட்டி வைப்பதால் வீட்டில் நேர்மறையான ஆற்றல்கள் பெருகும். வடக்கிலிருந்து தெற்கு திசையைப் பார்க்குமாறு நிலையைத் தவிர்த்து மற்ற திசைகளில் குடும்ப புகைப்படத்தை மாட்டி வைக்கலாம்.

அனைவரின் வீட்டு பூஜையறையில் கட்டாயமாக இருக்கும் ஒரு பொருள் கற்பூரம். பொதுவாக கற்பூரத்தை ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது அவ்விடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, தெய்வீக ஆற்றல்களின் அதிர்வலைகள் அதிகரிக்கும். எனவே உங்கள் வீட்டில் ஏதோ ஒரு வாஸ்து குறை இருப்பதாக நீங்கள் கருதும் பட்சத்தில், ஒரு சிறிய மண் தட்டில் கட்டி கற்பூரத்தை வைத்து அதை வீட்டின் குளியலறை, கழிவறை தவிர்த்து ஏதோ ஒரு பகுதியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதால் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களில் ஏற்படும் தடைகள், தாமதங்கள் இன்ன பிற தோஷங்கள் நீங்கும். கற்பூரம் முழுவதுமாக கரைந்தவுடன் மீண்டும் ஒரு கட்டி கற்பூரத்தை அந்த மண் தட்டில் வைக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு வீட்டில் இருக்கும் அழுக்கான ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அந்த வீட்டிற்கு வரவேண்டிய செல்வ வளங்களை தடுக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.

உங்கள் வீட்டிற்கு வெளியே தண்ணீர் தொட்டி இருக்கும் பட்சத்தில், அதன் அருகே தினமும் ஒரு சிறிய மண் விளக்கில் தீபம் ஏற்றி வைப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

மிக உயரமான மரங்களை வீட்டு பகுதியில் வளர்க்க விரும்புபவர்கள், வீட்டின் தென்மேற்கு பகுதியில் அத்தகைய மரங்களை நட்டு வளர்க்கலாம். இதனால் திடீர் பொருளாதார நஷ்டங்கள், எதிர்பாராத விபத்துக்கள் போன்றவை அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்படாமல் காக்கும்.

சொந்தத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களின் வியாபாரம் அலுவலகத்தில் இருக்கின்ற தங்களது அறை சுத்தமாகவும், வெளிச்சம் நிறைந்ததாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வியாபாரம், தொழிலில் ஈடுபட தங்களின் அலுவலக மேஜை, நாற்காலி போன்றவற்றை அமைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -