நம்முடைய வேண்டுதலுக்காக நாம் நம் வீட்டில் பூஜைகளை மேற்கொள்வோம். அந்த பூஜைகள் நல்லபடியாக நிறைவடைந்தால் நம்முடைய வேண்டுதலும் விரைவில் நல்லபடியாக நிறைவேறும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு. அவ்வாறு நாம் பூஜை மேற்கொள்ளும் பொழுது சில முக்கியமான குறிப்புகளை நாம் மனதில் வைத்துக் கொண்டுதான் செய்ய வேண்டும். அந்த பூஜை குறிப்புகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
அனுதினமும் நாம் செய்யக்கூடிய பூஜையை நித்திய பூஜை என்று கூறுவோம். இதை தவிர்த்து நாம் சில முக்கியமான நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்திற்காக ஏதாவது ஒரு பிரார்த்தனை வைத்துக்கொண்டு பூஜைகளை மேற்கொள்வோம். எந்த பூஜையாக இருந்தாலும் சரி நம் பூஜை அறையை நாம் பராமரிக்கும் விதத்தில் தான் நம்முடைய பூஜைக்குரிய பலன் நமக்கு கிடைக்கும் என்பதை எந்த நேரத்திலும், சூழ்நிலையிலும் மறக்கக்கூடாது.
பூஜை அறை எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையில் மட்டுமல்லாமல் வீட்டிலும் ஒட்டடை என்பதே இருக்கக் கூடாது. விசேஷமான பூஜையை நாம் செய்கிறோம் என்றால் முந்தைய தினமோ அல்லது அன்றைய தினமோ பூஜை அறையை சுத்தம் செய்து பச்சரிசி மாவால் கோலம் போட வேண்டும்.
நாம் பூஜை செய்யும் தெய்வத்தின் புகைப்படம் நின்றக் கோலத்தில் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அவர்களின் அருள் நமக்கு விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முடிந்த அளவு புகைப்படத்தை வைத்து பூஜை செய்வது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். விக்ரக ஆராதனை செய்பவராக இருந்தால், அதில் பல நிபந்தனைகள் இருக்கிறது. அவை அனைத்தையும் கடைபிடிப்பவர்கள் விக்ரக பூஜையை செய்யலாம்.
பூஜை மேற்கொள்ளும் பொழுது பூஜை செய்பவர்கள் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து பூஜை செய்ய வேண்டும். சில வீடுகளில் ஆண்கள் ஈரத்துண்டை அணிந்து கொண்டு பூஜை அறைக்குள் வருவார்கள். அவ்வாறு ஈரத்துணியை பூஜை அறைக்குள் அணிந்து கொண்டு வரக்கூடாது. பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் மின்விளக்குகளை உபயோகப்படுத்தாமல், தீபத்தின் வெளிச்சம் நிறைந்திருப்பது போல் பார்த்துக் கொண்டால் தீபக் கடாட்சம் நமக்கு கிடைத்து நம் பூஜை வெற்றி அடையும்.
எந்த பூஜையாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். விநாயகரை மஞ்சளில் பிடித்து வைத்து அவரின் நாமத்தை உச்சரித்து வணங்கிய பிறகு, நாம் குருவை வணங்கி விட்டு தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் பூஜை முழுமையாக நிறைவடையும்.
இந்த சிறு சிறு குறிப்புகளை நாம் நினைவில் வைத்துக் கொண்டு பூஜையை மேற்கொண்டால், அந்த பூஜையின் பலன் நம்மை விரைவில் வந்தடையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.