அம்மனின் அருளை முழுமையாகப் பெற, ஆடி மாதம் முழுவதும் வீட்டில் தீபம் ஏற்றும் போது, சொல்ல வேண்டிய மந்திரம்.

ammanl
- Advertisement -

ஆடி மாதம் என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது அம்மனுடைய வழிபாடுதான். இந்த வருடம், ஜூலை மாதம் அதாவது 17-07-2021 சனிக்கிழமை அன்று ஆடி மாதம் பிறக்கின்றது. குறிப்பாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு எதற்காக சிறப்பான வழிபாட்டு முறைகள் நடத்தப்படுகின்றன. ஆடி மாதம் அம்மனை நினைத்து வீட்டில் தீபம் ஏற்றும் போது, எந்த மந்திரத்தை உச்சரித்தால் அம்மனின் அருளை முழுமையாக நம்மால் பெற முடியும் என்பதை பற்றிய, ஆடி மாத சிறப்பு தகவல்களை பற்றிதான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஆடி மாதக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். ஆடி மாதம் தொடங்கிய உடன் காற்றும் அதிகமாக வீசத் தொடங்கிவிடும். காற்றின் மூலம் எந்த நோய் நொடியும் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காக வேப்பிலையை ஆடி மாதத்தில் வீட்டு வாசலில் வைத்து வழிபாடு செய்தார்கள். இதேபோல் ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு செய்தால் மாறி மழை பெய்யும் என்பதும் நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் இந்த ஆடி மாதம் அம்பாள், மக்களின் நலனிற்காக தவமிருந்த காலமாகவும் சில சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவேதான் அம்மனின் மனதை குளிர வைக்க கூழ் காட்சி அம்பாளுக்கு நிவேதனமாக படைப்பார்கள். இப்படி ஆடி மாதத்தில் அம்மனுக்காக பல சிறப்புகளை நாம் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

Amman Adiperukku

குறிப்பாக ஆடி மாதத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய குடும்பத்தின் நலனுக்காக, தங்களுடைய குடும்பம் நோய் நொடி இல்லாமல், ஆரோக்கியமாக செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காக அம்பாள் வழிபாட்டை மேற்கொள்வார்கள். அவரவர் வீட்டு வழக்கப்படி ஆடிமாத வழிபாட்டினை மேற்கொண்டாலும், தினமும் வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அம்மனை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

ஆடி மாதம் மட்டுமல்ல, நீங்கள் எப்போது உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து இறை வழிபாடு செய்தாலும் இந்த திருவிளக்கு மந்திரத்தை உச்சரிப்பது, குடும்பத்தில் சுபிட்சத்தை தரும். அப்படி முடியாதவர்கள் இந்த ஆடி மாதத்தில் மட்டுமாவது தீபம் ஏற்றும்போது இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். காரணம், இந்த ஆடி மாதம் முழுவதும் தீபம் ஏற்றும் போது இந்த மந்திரத்தை உச்சரித்தால், வருடம் முழுவதும் இந்த மந்திரத்தை உச்சரித்த பலனை நம்மால் பெற முடியும் என்றும் சொல்கிறது சாஸ்திரம்.

Mariamman

பெண்கள் தீபம் ஏற்றும் போது உச்சரிக்க வேண்டிய திருவிளக்கு மந்திரம் இதோ.

- Advertisement -

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதிமணி விளக்கே ஸ்ரீதேவி பொன்மணியே
அந்திவிளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாக்ஷி தாயாரே

பசும்பொன் விளக்கு வைத்துப்பஞ்சு திரி போட்டுக்
குளம்போல எண்ணெய் விட்டுக்
கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க

amman

வைத்தேன் திரு விளக்கு மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் ஜோதி உள்ள மாதாவைக்
கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாருமம்மா

சந்தான பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா
பெட்டிநிறைய பூஷணங்கள் தாருமம்மா
கொட்டகை நிறைய குதிரைகளை தாருமம்மா
புகழுடம்பை தாருமம்மா! பக்கத்தில் நில்லுமம்மா

amman

அல்லும்பகலும் என்றன் அண்டையிலே நில்லுமம்மா
சேவித்து எழுந்திருந்தேன், தேவி வடிவங்கண்டேன்
வஜ்ர கிரீடம் கண்டேன், வைடூர்ய மேனி கண்டேன்
முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்

சௌரி முடி கண்டேன் தாழை மடல் சூடக்கண்டேன்
பின்னல் அழகு கண்டேன் பிறை போல் நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்
கமலத் திரு முகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்

amman

மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக்கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென்ன ஜொலிக்கக் கண்டேன்
காலிற்சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்

மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு
மகிழ்ந்தேன் அடியேன் யான்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா
வந்த வினையகற்றி மஹா பாக்கியம் தாருமம்மா

தாயாகும் உன்றன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உன்றன் மலரடியில் நான் பணிந்தேன்

Amman

காமாட்சி அம்மனை மனதார நினைத்து, வீட்டில் காமாட்சியம்மன் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து, முடிந்தால் காமாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, வீட்டில் இருக்கும் பெண்கள், இந்த மந்திரத்தை மனதார உச்சரித்து அம்மன் வழிபாடு செய்தாலே, ஆடி மாதம் அம்பாளின் அருளாசியை சுலபமாக பெற்றுவிடலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -