கனவில் வந்து காட்சி தந்த ஐயப்பன் – கோவில் கட்டிய பக்தன் – உண்மை சம்பவம்

ayyappan3
- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலூகா, ஊனையூர் பஞ்சாயத்தில் கொசப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது, தென் சபரி ஐயப்பன் கோயில். சபரிமலைக்கு நடந்துசெல்ல இயலாத நிலையில் இருக்கும் பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு இருமுடி கட்டிவந்து ஐயன் ஐயப்பனைத் தரிசித்து வழிபட்டுச் செல்கிறார்கள். கொசப்பட்டி கிராமத்திலிருந்து குருசாமியான சூரக்குடி சிங்காரம் எனும் அன்பரின் தலைமையில் சபரி யாத்திரை செல்வது வழக்கம்.

1979-ம் ஆண்டில் ஒரு சம்பவம். யாத்திரைக்குக் கிளம்புவதற்கு முன்னதாக ஒருநாள் சக்தி பூஜை நடத்தினார்கள். அன்றிரவு பக்தர் ஒருவருக்குக் கனவு வந்தது. அதில், சிறுவன் ஒருவனின் கையைப் பிடித்து அழைத்து வருகிறார் பெரியவர் ஒருவர். நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுடனும் பெரியவர் காட்சி தர, சிறுவனோ  பொன்வண்ணமாக ஜொலித்தான். பெரியவர் அந்தச் சிறுவனைப் பக்தரிடம் ஒப்படைத்து விட்டு மறைந்துபோனார்.

- Advertisement -

விழித்தெழுந்ததும் கனவு பற்றி குழுவினரிடமும் குருநாதரிடமும் தெரிவித்தார் பக்தர். அனைவரும் சிலிர்த்துப்போனார்கள். மறுநாள் பூஜையின்போது அருள் வந்து ஆடினார் பூசாரி. ‘‘கனவில் சிறுவனாக வந்தது நான்தான். பெரியவர் கோலத்தில் என் அண்ணனே (முருகப் பெருமான்) இங்கு அழைத்துவந்தார். இனி, இங்கே கோயில் கொள்ளப்போகிறேன்’’ என்று அருள்வாக்குச் சொன்னார் அவர். ஆம்! ஐயன் ஐயப்பனே அவர் மூலம் அருள்வாக்கு தந்தான்.

அப்போது, ‘‘நீங்கள் காட்டில் வசிக்கும் தெய்வமாச்சே’’ என்று குருசாமி முதலானோர் தயக்கத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களிடம், ‘‘கவலைப்படாதீர்கள். உங்கள் அனைவரையும் நான் பாதுகாப்பேன். சபரி பீடத்தில் உள்ளது போன்று  இங்கும் அருள்பாலிப்பேன்’’ என்று ஐயனிடம் இருந்து சத்தியவாக்குக் கிடைத்தது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம் என்ன தெரியுமா ?

பிறகென்ன… மிக அற்புதமாக எழும்பியது தென் சபரி ஐயப்பன் கோயில். 1995-ம் ஆண்டு திருப்பணிகள் முடிந்து கும்பாபி ஷேகம் நடைபெற்றது. அன்று முதல், தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறைகளை எல்லாம் களைந்து, அவர்கள் வேண்டும் வரத்தை  தந்து அருள் பாலிக்கிறார், ஐயன் ஐயப்பன்.

- Advertisement -