மணக்க மணக்க நெய் சோறு குக்கரில் சட்டுன்னு இப்படி செஞ்சு பாருங்க 10 நிமிஷத்தில் ருசியான லஞ்ச் ரெடி!

nei-soru1
- Advertisement -

குழந்தைகளுக்கு சாதத்தில் நெய் விட்டு பிசைந்து கொடுத்தால் எவ்வளவு விரும்பி சாப்பிடுவார்கள்! அப்படி இருக்க, இது போல ருசியான நெய்ச் சோறு செஞ்சு கொடுத்து பாருங்க, குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் அதற்கு அடிமையாகி விடுவார்கள். செய்வதற்கும் ரொம்பவே எளிமையாக இருக்க கூடிய இந்த நெய்ச்சோறு குக்கரில் சட்டுனு 10 நிமிஷத்தில் எப்படி செய்றாங்க? இதை நாமும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நெய் சோறு செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, நெய் – 4 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, புதினா இலை – ஒரு கைப்பிடி, மல்லி இலை – ஒரு கைப்பிடி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசி மொக்கு – தலா 2, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் – ஒரு கப், தண்ணீர் – ஒன்றரை கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

நெய் சோறு செய்முறை விளக்கம்:
முதலில் பாஸ்மதி அரிசி ஒரு கப் அளவிற்கு எடுத்து நன்கு களைந்து சுத்தம் செய்து அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறினால் போதும், அதற்குள் மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புதினா மற்றும் மல்லி இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வையுங்கள். அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு காய விடுங்கள்.

நெய் நன்கு காய்ந்ததும் முந்திரிப் பருப்புகளை உடைத்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வறுத்த முந்திரிப் பருப்பை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின் கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அண்ணாச்சி மொக்கு ஆகியவை வறுபட்டதும் பெரிய வெங்காயத்தை தோல் சீவி மெல்லியதாக நீளவாக்கில் பச்சடிக்கு செய்வது போல நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதனுடன் காரத்திற்கு 2 பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போக வெங்காயத்தின் நிறம் லேசாக கண்ணாடி பதம் வரை நன்கு வதக்கியதும் நறுக்கி வைத்துள்ள மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்று சேர நன்கு கலந்து விட்ட பின்பு ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பையும், மீதமிருக்கும் நெய்யையும் சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து விட்டு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும். தண்ணீர் கொதித்ததும் மூடி போட்டு 2 லிருந்து 3 விசில் விட்டு எடுத்தால் போதும், மணக்க மணக்க நெய் சோறு சூப்பராக தயாராகி விட்டிருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்டில் இருப்பவர்களையும் அசத்துங்க.

- Advertisement -