சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் இருந்து கொண்டு 10, 12, 2 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே சிம்ம ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது உங்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய நேர்மையான குணத்திற்கு பலவிதங்களில் இடையூறுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு நீங்கள் நடந்து கொண்டாலும் உண்மையில் உங்களுடைய நிலை அவ்வாறாக இருப்பதில்லை. எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்ளுங்கள். வரவிருக்கும் இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் சற்று கூடுதல் கவனம் தேவை.
உத்தியோகம் மற்றும் தொழில்:
உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்க கூடும். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சியும் காண்பீர்கள். உத்தியோக உயர்வு, பணியிட மாற்றம், ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தமட்டிலும் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ப பலன்களும் இருக்கும். உங்களுடைய முழு ஒத்துழைப்பை கொடுப்பதன் மூலம் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். அதற்குரிய எல்லா வாய்ப்புகளும் குருபகவான் ஏற்படுத்திக் கொடுப்பார். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் முன் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.
பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. நிதி நிலைமை சீராக இருக்கும். செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். ஆடம்பரத்தை தவிர்க்காவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கடன் வாங்க நேர்ந்தால் அதை திரும்ப கட்டுவதில் நிச்சயம் சிரமங்களை சந்திப்பீர்கள். கூடுமானவரை வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்ப வாழ்க்கை:
உங்களுடைய குடும்பத்தைப் பொறுத்தவரை அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். குடும்பத்திற்காக நேரம் செலவிட முடியாத சூழ்நிலையில் மாட்டிக் கொள்வீர்கள். இருப்பினும் உங்களுடைய குடும்பத்தார் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் உருவாகும் வாய்ப்புகள் உண்டு. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தை பொறுத்தவரை குரு பெயர்ச்சிக்கு பிறகு அவ்வளவாக சிறப்பான பலன்கள் இல்லை. எனவே ஆரோக்கியத்தின் மீது மிகுந்த அக்கறை தேவை. உணவு கட்டுப்பாட்டு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தலைவலி, உடல் சோர்வு போன்றவை அடிக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு சுத்தம், சுகாதாரம் பேணி காப்பது நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
செய்ய வேண்டிய பரிகாரம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் விஷ்ணு பகவான் வழிபாடு நிறைய நன்மைகளை கொடுக்கும். விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் போன்றவற்றை உச்சரித்து வந்தால் அமைதி பிறக்கும். ஏழை முதியவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுங்கள் நிம்மதியான வாழ்க்கை அமையும்.
இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – கடகம்
இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.