கடன் தொல்லை தீர பௌர்ணமி பரிகாரம்

pournnami moon manthiram
- Advertisement -

இது இன்று பலரின் கண்ணீருக்கு காரணமாக இருக்கக் கூடிய ஒன்றெனில் அதை கடன் என்று சற்றும் யோசிக்காமல் சொல்லி விடலாம். அந்த அளவிற்கு கடன் இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் ஆட்டி படைக்கிறது. அவசர தேவைக்கு என்று கடன் வாங்கி விட்டு மறுபடியும் அந்த கடனை அடைக்க முடியாமல் திணறும் எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கிறோம்.

ஏன் இப்படியான பிரச்சனையில் நாமே கூட இருக்கலாம். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வே இல்லையா? என்று பலர் மனதிலும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கான ஒரு எளிய வழிபாட்டு முறையும், மந்திரத்தையும் தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

கடன் தீர பௌர்ணமி வழிபாடு

இந்த வழிபாடு பௌர்ணமி அன்று மாலை தான் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் கட்டாயமாக பௌர்ணமி திதி இருக்க வேண்டும். அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் சுத்தம் செய்து விட்டு சுவாமி படங்களுக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து தெய்வப் படங்களுக்கு மலர்களை சாற்றி விடுங்கள்.

அதன் பின்னர் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் எப்போதும் எத்தனை தீபம் ஏற்றுகிறார்களோ அதை ஏற்றலாம் தவறில்லை ஆனால் நெய் ஊற்றி தான் தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு நெய்வேத்தியம் படைக்க வேண்டும். அதற்கு வெள்ளை நிறத்திலான பால் பாயாசம், கற்கண்டு பொங்கல் இப்படி விசேஷமானவற்றை படைத்தால் இன்னும் விசேஷமான பலன்களை பெறலாம்.

- Advertisement -

இப்போது பூஜை அறையில் நீங்கள் வடக்கு பார்த்து அமர்ந்து கொண்டு ஓம் சந்திர பகவானே நமக என்று 108 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு தெய்வப் படங்களுக்கு கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும். இந்த தீபாராதனை அப்படியே உங்கள் வீட்டிற்கு வெளியில் எடுத்து சென்று சந்திர பகவானை பார்த்தும் காட்டுங்கள். அப்போது சந்திர பகவானை மனதார பிரார்த்தித்து கடன் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சகல செல்வமும் பெற முருகர் வழிபாடு

இவை எல்லாம் முடித்த பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து உண்ணுங்கள். இந்த சந்திர வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுடைய மிகப்பெரிய பிரச்சனையான கடன் தொல்லையில் இருந்து விரைவில் மீள்வதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. வாய்ப்பு வரும் போது தவற விடாமல் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -