மரவள்ளி கிழங்கு அடை செய்முறை

maravalli kilangu adai
- Advertisement -

தினமும் காலையிலும் இரவிலும் ஒரே மாதிரி டிபன் ஐட்டங்களை செய்து தருவதற்கு பதிலாக வித்தியாசமான புதிய வகை டிபன் ஐட்டங்களை செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு தருவதன் மூலம் எந்தவித வெறுப்பும் இல்லாமல் ருசித்து சாப்பிடுவார்கள். அதிலும் ஆரோக்கியமான பொருட்களை இந்த டிபன் ஐட்டத்திடம் சேர்த்து தரும்பொழுது அந்த சத்துக்களும் அனைவருக்கும் போய் சேரும். அந்த வகையில் மரவள்ளிக்கிழங்கை வைத்து எளிமையான முறையில் அடை செய்வது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கேரளா மக்கள் அதிக அளவில் உண்ணும் கிழங்கு வகைகளில் ஒன்றாக திகழ்வதுதான் மரவள்ளி கிழங்கு. இந்த மரவள்ளிக்கிழங்கு பல வகைகளில் மருத்துவ ரீதியாக பயன்படுகிறது. மேலும் சில மருந்துகள் தயாரிப்பதற்கும் இந்த மரவள்ளிக்கிழங்கில் இருக்கக்கூடிய மூலப்பொருட்கள் உதவி புரிகின்றன. மரவள்ளி கிழங்கை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய சரும பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் மரவள்ளி கிழங்கு உதவுகிறது. முடியை அடர்த்தியாக வளர வைக்கவும் உதவுகிறது. மரவள்ளிக்கிழங்கை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய எடை குறைப்பிற்கு உதவுகிறது. தலைவலியை தடுக்கவும் இது உதவுகிறது. கண்பார்வை மேம்படுகிறது. பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த கிழங்கை அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் சிறந்த ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி – 300 கிராம்
  • துவரம் பருப்பு – 100 கிராம்
  • மரவள்ளி கிழங்கு – 1/2 கிலோ
  • காய்ந்த மிளகாய் – 7
  • சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • முழு பூண்டு – 1
  • வெங்காயம் – 2
  • கருவேப்பிலை – 2 இனுக்கு
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் இட்லி அரிசியையும், துவரம் பருப்பையும் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு இவற்றையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மரவள்ளிக்கிழங்கில் இருக்கக்கூடிய தோல்களை நீக்கி கேரட் உரசுவது போல் உரசி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பூண்டு காய்ந்த மிளகாய் இவற்றை சேர்த்து முதலில் கொரகொரப்பாக அளித்துக்கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்திருக்கும் அரிசி, துவரம்பருப்பு, சோம்பு இவற்றை சேர்த்து அரைத்து இதனுடன் மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை அப்படியே ஒரு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும். இப்பொழுது இதில் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து குறைந்தபட்சம் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை மூடி வைத்து விட வேண்டும்.

பிறகு நாம் எப்போதும் அடை சுடுவது போல் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் சிறிது எண்ணெயை ஊற்றி அதற்குள் மெல்லியதாக இல்லாமலும் கனமாகவும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவு தடிமனுடன் மாவை ஊற்றி வேகவிட வேண்டும். ஒரு புறம் வெந்ததும் மறுபடியும் அடையை திருப்பிப் போட்டு லேசாக எண்ணெய் ஊற்றி மறுபுறம் வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும் சுவையான மரவள்ளி கிழங்கு அடை தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: உடல் வலிகளை நீக்கும் முடக்கத்தான் ரசம்

மரவள்ளி கிழங்கில் சிப்ஸ் செய்து தந்தால் மட்டுமே தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சிப்ஸ் செய்வதற்கு பதிலாக இந்த வகையில் அடையாக செய்து கொடுப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைவரும் எந்தவித யோசனையும் இல்லாமல் சாப்பிடுவார்கள்.

- Advertisement -