மைசூர் மசாலா தோசை செய்முறை

dosai
- Advertisement -

ஒரு மாவு தான். ஆனால் அதில் நாம் நிறைய ஐட்டம் செய்து பசங்களுக்கு கொடுக்கலாம். வித்தியாசமாக நாம் செய்து கொடுத்தால் அவர்களும் அதை விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள். அந்த மாதிரி நாம் செய்து கொடுக்கும் போது ஹோட்டலுக்கு போக வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு வராது. அப்படிப்பட்ட ஒரு அருமையான ஹோட்டல் ரெசிப்பியான மைசூர் மசாலா தோசையை தான் எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பகுதியில் பார்க்கப் போகிறோம்.

தோசை செய்த பிறகு நாம் தோசைக்காக ஏதாவது ஒரு சட்னியை தயார் செய்வோம். ஆனால் இந்த மைசூர் மசாலா தோசைக்கு எந்தவித சைடிஷும் தேவையில்லை. இதில் அனைத்து வகையான சுவைகளும், மனங்களும் நிறைந்து இருப்பதால் இந்த தோசையை அப்படியே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டு ருசிப்பார்கள் என்று கூறலாம். மணமும், சுவையும் மிகுந்த இந்த மைசூர் மசாலா தோசை செய்முறையை பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

மைசூர் மசாலா தோசை செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 3, பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – 4, பூண்டு – 8 பல், காஷ்மீரி வர மிளகாய் – 10, இஞ்சி – ஒரு இன்ச் துண்டு, எண்ணெய் – தேவையான அளவு, உளுந்து – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இனுக்கு, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை:
இந்த தோசையில் நாம் ஒரு பேஸ்ட்டை அப்ளை செய்ய வேண்டும். அந்த பேஸ்ட் செய்வதற்கு முதலில் கடாயை அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கிய இரண்டு வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் சிறிது நிறம் மாறியதும், அதில் காஷ்மீரி வர மிளகாய் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். வெங்காயம் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் வரமிளகாயை சேர்த்து, அதனுடன் பூண்டையும், இஞ்சியையும் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மசாலா செய்வதற்கு உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோல் உரித்து, மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு சேர்க்க வேண்டும். கடுகு வெடித்து உளுந்து சிவந்ததும், அதில் நறுக்கி வைத்து இருக்கும் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தலையை தூவி அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் தோசை மாவை ஊற்ற வேண்டும். இந்த தோசையை நாம் திருப்பிப் போட மாட்டோம் என்பதால் எண்ணெய் ஊற்றி மூடி போட்டு ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும். தோசை வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட் சிறிதை தோசையின் நடுவில் வைத்து தோசை முழுவதும் பரப்பி விட வேண்டும். பிறகு செய்து வைத்திருக்கும் மசாலாவை தோசையின் நடுவில் வைத்து தோசையை மூன்றாக மடித்து எடுத்து வைத்து பரிமாற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ரேஷன் பச்சரிசியிலேயே அருமையான சுவையோடு பாயாசம் தயாரிப்பது எப்படி? ஆடி மாசம் கிராமப்புறங்களில் இந்த பாயாசம் ஃபேமஸ் தெரியுமா?

சிறிது நெய்யை தோசையில் ஊற்றி பரிமாறினால் அதன் மனமே தனியாக இருக்கும். எந்தவித சட்னியையும் எந்தவித சைடிஷும் இந்த தோசைக்கு தேவைப்படாது. அனைத்து சுவைகளும் நிறைந்த இந்த அருமையான மைசூர் மசாலா தோசையை உங்கள் வீட்டிலும் நீங்கள் முயற்சி செய்து ருசித்துப் பாருங்கள்.

- Advertisement -