சத்து நிறைந்த இந்தக் கீரையுடன் 2 முட்டை சேர்த்து செய்து பாருங்கள் அட்டகாசமா இருக்கும்! பாலக்கீரை பொரியல் சுவையாக செய்வது எப்படி?

palak-keerai-poriyal1_tamil
- Advertisement -

கீரை வகைகளில் பாலக்கீரை ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. அதிகப்படியான அயன் மற்றும் விட்டமின்களை கொண்டுள்ள இந்த பாலக்கீரை உடலின் ரத்த அளவை அதிகரிக்கிறது. அடிக்கடி செய்து சாப்பிட்டால் பல நோய்களிலிருந்து நிவாரணம் காணலாம். இதை சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிட்டாலும் டேஸ்டாக இருக்கும். ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் ருசியாக இருக்கும். இந்த பாலக்கீரை ரெசிபி எப்படி எளிதாக செய்வது? அப்படின்னு தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்

பாலக்கீரை – ஒரு கட்டு, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – நான்கு, பூண்டு பல் – நான்கு, சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு, கருவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், முட்டை – இரண்டு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை விளக்கம்

பாலக் கீரையை முதலில் தடிமனான தண்டுகளை தவிர மற்ற மெல்லிய தண்டுகளுடன் சேர்த்து ஆய்ந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் எதுவும் இல்லாமல் பொடி பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதனுடன் நாலு பல் பூண்டை இடித்து சேருங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையையும் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

காரத்திற்கு நான்கு வர மிளகாய்களை காம்பு நீக்கி இரண்டாக உடைத்து போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். ரெண்டு நிமிடம் நன்கு வதங்கிய பிறகு கொஞ்சம் மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள். இப்போது நீங்கள் நறுக்கி வைத்துள்ள பாலக்கீரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது அதுவே தண்ணீர் விட ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
மணக்க மணக்க பச்சை சுண்டைக்காய் துவையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இப்படி அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க!

தண்ணீர் முழுக்க வற்றுவதற்குள் கீரை நன்கு வெந்து வந்திருக்கும். கீரை வெந்த பிறகு ரெண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி கிண்டி விடுங்கள். முட்டை வெந்து கீரையுடன் ஒன்று சேர்ந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து தேங்காய் துருவலை சேர்த்து பரிமாற வேண்டியது தான். முட்டை சேர்க்கும் பொழுது தேங்காய் துருவல் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் தேங்காய் துருவல் சேர்த்து அப்படியே சாப்பிடலாம். ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்த பாலக்கீரை ரெசிபி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு அடிக்கடி இதை சாப்பிடணும்னு தோணும்.

- Advertisement -